தமிழ்நாடு

கடன் தர சிபில் ஸ்கோர் பார்க்கல.. ரிப்போர்ட் தான்: விவசாயிகள் மீண்டும் அதிருப்தி

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடன் தர சிபில் ஸ்கோர் பார்க்கல.. ரிப்போர்ட் தான்: விவசாயிகள் மீண்டும் அதிருப்தி
Farmers Condemns Cooperative Department Stance on CIBIL Score Report Requirement for Crop Loans
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில் அதனை மீண்டும் கூட்டுறவுத்துறை உறுதி செய்துள்ளதற்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

”கடந்த 26-05-2025 அன்று தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மாநில பதிவாளர் அவர்கள் விவசாயிகள் கடன் அட்டை (Kissan Credit Card) மூலம் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு விவசாயிகளின் சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன, ஆனால் அந்த பயிர் கடன்கள் இரண்டு மடங்கு குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நெல்லுக்கு ஒரு ஏக்கர் பயிர் செய்ய 76 ஆயிரம் ரூபாய் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு செலவாகிறது, ஆனால் தமிழ்நாடு அரசு ரூ. 36,000 மட்டுமே பயிர் கடனாக வழங்கி வருகிறது. எனவே கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக, விவசாயிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இது போதாமல் வியாபாரிகளிடமும், இடைத்தரகர்களிடமும், உரக்கடைகளிடமும் கடன் பெற்றுத்தான் விவசாயத்தை செய்து வருகின்றனர். மத்திய அரசினுடைய புள்ளி விவரங்களின்படி கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து மூன்று ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் தமிழ்நாட்டு விவசாயிகள் விவசாயத்தில் லாபம் பெற முடியவில்லை, விவசாயிகள் பயிர் கடனைக்கூட திருப்பி செலுத்த முடியாததால் அவ்வப்போது மாநில அரசும் கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. ஏற்கனவே விவசாயிகள் விவசாய மூலதன கடன், கோழிப்பண்ணை, விசைத்தறி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த சிறு - குறு தொழில்களுக்கும், கல்வி கடன், நகை கடன் ஆகியவற்றை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று விவசாயத்தில் சரியான வருமானம் இல்லாததால், செலுத்த முடியாததால், சிபில் ரிப்போர்ட் என்கிற பிரச்சினையில் சிக்கியுள்ளதால் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே விவசாயிகளின் ஒரே புகலிடமாக உள்ளது. இனிமேல் கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும் சிபில் ரிப்போர்ட்டில் பதிவேற்றம் செய்யப்படும், அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இனி விவசாயிகள் பயிர் கடன், குழந்தைகளுக்கு கல்வி கடன் உள்ளிட்ட எந்த கடனையும் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிபந்தனைகள் எந்த அடிப்படையில் விதிக்கப்படுகிறது என்பதை கூட்டுறவுத்துறை இதுவரை விளக்கவே இல்லை. இந்திய ரிசர்வ் வங்கி கிசான் கிரெடிட் கார்டு எனப்படும் KCC கடன்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதலின்படி விவசாய கடன்களுக்கு சிபில் பார்க்க வேண்டுமென எங்கும் தெரிவிக்கப்படவில்லை.

இதுபோன்ற பிரச்சனை மகாராஷ்டிராவில் எழுந்தபோது மகாராஷ்டிரா முதல்வர் அவர்கள் விவசாய கடன்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், கூட்டுறவு சங்கங்களும் சிபில் பார்த்து கடன் வழங்குவது தவறு என மிக தெளிவாக உத்தரவு பிறப்பித்தார். சிபில் பார்த்து கடன் வழங்குவது, சிபில் ஸ்கோர் பார்த்து கடன் வழங்குவது என்கிற இரண்டு வழிமுறைகளுமே விவசாயிகளை கடுமையாக பாதிக்கக் கூடியது.

ஸ்கோர் பார்க்கவில்லை.. ரிப்போர்ட் மட்டுமே:

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சிபில் ஸ்கோர் பார்க்கவில்லை, இதே திட்டத்தில் வேறு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற்று இருக்கிறார்களா என்பதை பார்ப்பதற்கு மட்டுமே சிபில் ரிப்போர்ட் பார்க்கிறோம் என தெரிவிக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை, ரிசர்வ் வங்கியே இதுபோன்ற நிபந்தனை விதிக்கவில்லை, அப்படி இருக்கும்போது தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மட்டும் தன்னிச்சையாக விவசாயிகளுக்கு இந்த நிபந்தனை விதிப்பது யாருக்காக?

இந்த பிரச்சனை எழுந்தவுடன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது, கடந்த திங்கள் கிழமை (09-06-2025) அன்று 24 மாவட்டங்களில் இந்த நிபந்தனைகளை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையின் இந்த செயலானது தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தக் கூடியது, இதுகுறித்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் தவறான விளக்கங்களை தமிழ்நாடு அரசிற்கு கொடுத்து, அரசுக்கு அவப்பெயரை கூட்டுறவுத்துறை ஏற்படுத்தி வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் இருந்து விவசாயிகளை விரட்டி அடிப்பதற்காகவே இதுபோன்ற செயல்களை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை தன்னிச்சையாக செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு இது சம்பந்தமாக கொள்கை முடிவு எடுக்காத சூழ்நிலையில், கூட்டுறவுத்துறை தன்னிச்சையாக முடிவெடுத்து விவசாயிகளை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

எனவே கூட்டுறவுத்துறை சமாளிக்கும் போக்கை கைவிட்டு உடனடியாக தான் வெளியிட்ட தவறான சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.