தமிழ்நாடு

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு....கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு....கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறப்பு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது.

பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

நூறு அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர் மட்டம் நேற்று காலை (ஜூன் 15) 82 அடியாக இருந்த நிலையில் அணைக்கான நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து இரவு 95 அடியை எட்டியது.

இந்நிலையில் தொடர் மழையால் அணைக்கான நீர் வரத்து 15 ஆயிரம் கன அடியாக இருந்த காரணத்தால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர துவங்கி நள்ளிரவு அணை அதன் முழு கொள்ளளவான 100 அடியை நெருங்கியது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்மட்டத்தை 97.5 அடியாக நிலை நிறுத்தி பராமரிக்கும் விதமாக அணைக்கான தற்போதைய நீர்வரத்தான வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் ஆற்றின் வேகம் அதிகரிக்க துவங்கிய நிலையில் பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இதன் கரையோர பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்கக்கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளது.

கண்காணிப்பு தீவிரம்

காவல்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது.மேட்டுப்பாளையம் வருவாய்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.