தமிழ்நாடு

வடிவேலு காமெடி பாணியில் ஏலக்காய் வியாபாரியிடம் நூதன மோசடி!

ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.30 லட்சத்தை நூதன முறையில் ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.

வடிவேலு காமெடி பாணியில் ஏலக்காய் வியாபாரியிடம் நூதன மோசடி!
cardamom trader - 30 lakhs cheating
ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஊருக்கு போக பஸ்ஸில் அமர்ந்திருப்பார். அப்போது மதுரை மல்லி வாங்கிக்கொள்ளுமாறு ஒரு வியாபாரி அவரிடம் பிடிவாதம் செய்வார். வடிவேலும் போன போது என மல்லியை வாங்குவார். பார்த்தால், ஒரு பேப்பர் பண்டலை மல்லிப்பூவினால் சுற்றி நூதனமாக ஏமாத்தியிருப்பார், அந்த வியாபாரி.

அப்படியொரு கதை தான் நிஜத்தில் நடந்தேறியுள்ளது. சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சென்னை பாரிமுனை பகுதியில் ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏலக்காய், பட்டை, கிராம்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதியும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயகுமார், ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்றவற்றை வியாபாரம் செய்த பணத்தை வசூல் செய்வதற்காக கடந்த 12 ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு சென்றிருந்தார். பணத்தை வசூலித்து விட்டு ரூ.30 லட்சம் பணத்துடன் சென்னைக்கு புறப்பட தயாரானார்.

அப்போது விஜயகுமாரினை போனில் ஒருவர் அழைத்துள்ளார். போனில் பேசியவர், தான் தங்களது வாடிக்கையாளர் என்றும், தெரிந்த நபர் போலவும் பேசி உள்ளார். தனக்கு அவசரமாக ரூ.30 லட்சம் தேவைப்படுகிறது. தான் விஜயவாடாவில் இருப்பதாகவும் இங்கு பணத்தை கொடுத்தால் சென்னையில் நமது ஆள் இருப்பதாகவும் அங்கு உடனே பணத்தை கொடுப்பதாக கூறியதை விஜயகுமார் நம்பியதாக தெரிகிறது.

மகனை அனுப்பிய ஏல வியாபாரி:

உடனே சென்னையில் இருந்த தனது மகனை பெரியமேடு சைடாம்ன்ஸ் சாலைக்கு அனுப்பி அங்கு வந்த அடையாளம் தெரியாத நபரிடம் பிளாஸ்டிக் பையில் வைத்து இருந்த பணத்தை பெற்று கொள்ளும்படி விஜயகுமார் தெரிவித்துள்ளார். அவரது மகனும் சென்று பணத்தை வாங்கிய பிறகு தந்தையிடம் தெரிவித்தார். இதன் பிறகு விஜயகுமார் ரூ.30 லட்சத்தை விஜயவாடாவில் இருந்து பேசியவருக்கு கொடுத்தார்.

ரூ.30 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்ட விஜயகுமாரின் மகன் வீட்டிற்கு சென்று பணத்தை பார்த்த போது தான் கட்டுக்கட்டாக வைத்து இருந்த 500 ரூபாய்க்கு நடுவில் அனைத்தும் வெற்று பேப்பர் இருந்தது தெரிந்தது. அதிர்ச்சியடைந்து அவர் தனது தந்தை விஜயகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசார் தீவிர விசாரணை:

உடனே விஜயகுமார் போனில் பேசிய நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. பிறகு நேற்று சென்னைக்கு வந்த விஜயகுமார் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பணத்தை ஏமாற்றிய கும்பல் வந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை தற்போது போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஏமாற்றிய நபர் இந்தியில் பேசியதாக தெரிகிறது. போலீசார் செல்போன் எண்ணையும் ஆய்வு செய்து வருகின்றனர். நூதன முறையில் ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி நடைப்பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.