தமிழ்நாடு

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் வரை சிறை - மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் கடன் வசூல் ஒழுங்கு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

 கடன் வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் வரை சிறை  - மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி
தமிழக சட்டப்பேரவையில் கடன்களை வசூலிக்க சட்டவிரோதமான செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதாவை துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் என்ற தமிழ்நாடு அரசின் மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பொது மக்களுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அவற்றை வலுக்கட்டாயமாக வசூல் செய்து, அதன் மூலம் கடன் பெற்றவர்களோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தற்கொலை செய்து கொண்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற கூட்டத் தொடரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் கடனை வலுக்கட்டாயமாக வசூலித்து, அதன் மூலம் கடன் பெற்றவர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ தற்கொலை செய்து கொண்டால், அதற்கு காரணம் ஆனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், கடுமையான விதிகளையும் அறிவித்தார். கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல், கடன் வழங்கினால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இந்த மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இந்த மசோதா உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

குரல்வாக்கெடுப்பு மூலம், இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், கடன் ஒழுங்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் மருத்துவக் கழிவுகளை கொட்டினால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழி செய்யும் சட்ட மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.