தமிழ்நாடு

'வணிகம் செய்ய உரிமக் கட்டணம்' விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

'வணிகம் செய்ய உரிமக் கட்டணம்' விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
Minister Periyasamy Responds to Edappadi Palaniswami on Rural Business License Fees
அதிமுகவின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தனது பரப்புரையின் போது, திமுக அரசில் “ கிராமப்புறங்களில் சிறுதொழில் மற்றும் வணிகம் செய்ய உரிமக் கட்டணம்” விதிக்கப்படுவதாக பேசியிருந்தார். இது ஏற்கெனவே நடைமுறையில் இருப்பது தான், இதுத்தெரியாமல் எடப்பாடி பேசியுள்ளார் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுத்தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

“தவறான கூட்டணி வைத்துவிட்டதால் தடுமாறிக் கொண்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை என்ற பெயரில் தினசரி ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறார், இவர் சொல்லும் எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. கிராமப்புறங்களில் சிறுதொழில் மற்றும் வணிகம் செய்ய உரிமக் கட்டணம் என்ற ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசு ஏதோ புதிதாக கொண்டு வந்தது போல தனது வழக்கமான அவதூறு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டுள்ளார்.

உண்மையில் கிராம ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெறவேண்டும் என்பது 1958-இல் கொண்டு வரப்பட்டது. இது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இல் பிரிவு 159-இன் படியும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதே சட்டத்தின்கீழ் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சிக்காலத்தில் "அபாயகரமானதும் மற்றும் தீங்குவிளைவிக்கும் வர்த்தக உரிமம் (Dangerous and Offensive Trade Licence)" என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்ததுதான் இந்த நடைமுறை! இதனைக்கூட தெரிந்துகொள்ளாமல் ஆட்சி நடத்திவிட்டு இப்போது வழக்கம்போல் தூக்கம் கலைந்து எழுந்து வந்து பரப்புரை என்ற பெயரில் பழைய அறிக்கை அரசியலையே நடத்திக் கொண்டிருக்கிறார்.”

அதிமுக ஆட்சிக்காலத்திலேயே இருந்தது: ஐ.பெரியசாமி

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், 2011-12-இல் 85,649 ஆக இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சிக் காலத்தில் 2020-21இல் 2,05,100 ஆக உயர்ந்தது. அதேபோல் 2011-12-இல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் இவரது ஆட்சிக் காலத்தில் ரூ.12.90 கோடியாக உயர்ந்தது.

இவையெல்லாம் கோப்புகளில் உள்ளது. அவர் மறுக்க முடியாது. செய்வதை எல்லாம் செய்துவிட்டு இன்றைக்கு கிராமப்புற சிறு வணிகர்களுக்காக பரிந்து பேசுவது போல இவர் நாடகம் ஆடுவதைப் பார்த்துப் பொதுமக்கள் ஏமாந்து போக தயாராக இல்லை.

2018-ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் மட்டும் வெளியிடப்பட்ட அரசிதழில் ஒன்றியம் வாரியாக, ஊராட்சி வாரியாக ஒவ்வொரு தொழிலுக்கும், எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ள தையல் கடை, பெட்டிக்கடை, சிறு உணவகம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழில்களுக்கும் உரிமக் கட்டணத்தை அரசிதழாக அச்சடித்து வழங்கியது அனைத்தும் அரசின் வசம் உள்ளது. இதனை நான் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. உரிமம் கட்டணம் என்பது எப்போதும் உள்ளது. அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலும் இருந்தது என்பதை நினைவூட்டவே சொல்கிறேன்.

தமிழ்நாடு அரசின் தற்போதைய நடவடிக்கைக்கான பின்னணி;

கிராமப்புற ஊராட்சிப் பகுதிகளில் வணிகம் / தொழில் புரிய பல்வேறு உரிமங்கள், "அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம்" என்று பழைய அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தன. அதுபோல, ஒவ்வொரு ஆண்டும் இந்த உரிமம் புதுபிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையும் இருந்து வருகிறது. இன்றளவிலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு வகையான நிறுவனங்கள் தொழில் / வர்த்தக உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வரி வருமானம் கிடைத்து வருகிறது.

தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு பல ஆண்டுகளாக இருந்த போதும் முறையான விதிகள் (Rules) இல்லாததால் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீர்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்கள் நிர்ணயம் செய்து அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து வந்தன. இக்குறைகளை நீக்கும்பொருட்டு பல்வேறு வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இப்போது புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம்:

மேலும், ஆறாவது மாநில நிதிக்குழு, "அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம்" என வழங்கப்பட்டிருந்த பெயரை, "வணிக உரிமம்" என எளிமைப்படுத்தி மாற்றி வழங்க பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தற்போது வகுக்கப்பட்டுள்ள விதிகளில், "அபாயகரமானதும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வர்த்தக உரிமம்" என்ற பெயரை, "வணிகம் அல்லது தொழில் உரிம விதிகள்" என மாற்றி சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு 04.03.2024 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகம் அல்லது தொழில் உரிமம் பெறுவதற்கான நடைமுறை விதிகள் உருவாக்கப்பட்டு, 09.07.2025அன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இப்புதிய நடைமுறையின்படி, "ஆன்லைனில் வணிக உரிமம் பெறும் நடைமுறை” கொண்டு வரவும், முந்தைய சட்டப் பிரிவின்படி ஒவ்வொரு ஆண்டும் தொழில் உரிமம் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என்ற சலுகை" "நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைவிட குறைந்த தொழில் உரிமக் கட்டணம் நிர்ணயம்” “வணிக உரிமம் பெறும் விண்ணப்பம் மீது 30 நாட்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் உரிமம் வழங்கப்பட்டதாக கருதப்படும் (Deemed Approval) என்ற சலுகை” “விண்ணப்பங்களை முறையான விசாரணை உரிய வாய்ப்பு அளிக்காமல் நிராகரிக்கக்க கூடாது என்ற நிபந்தனை” என்ற பல்வேறு நன்மைகள் இந்த புதிய விதியில் சேர்க்கப்பட்டுள்ளன” என அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.