தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுவதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறும் இன்றி விசாரிக்க வேண்டும் என்பதால் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை, டாஸ்மாக் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தது.