தமிழ்நாடு

Pollachi Judgement: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விவரம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

Pollachi Judgement:  பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விவரம்!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள்
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோவாக எடுத்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் அழுது கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் அனைத்து தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தது.

சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்கு:

இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் இந்த வழக்கை, பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்த நிலையில், பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

வழக்கு விவரம்:

இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள் கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்துதல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிறுதல் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.கைதான ஒன்பது பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது 2019 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கோவை மகளிர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதன் பிறகு வழக்கு விசாரணை தாமதமானது. அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் குற்றவாளிகள் 9 பேரின் தண்டனை விவரங்களை நீதிபதி நந்தினி தேவி வாசித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

85 லட்சம் இழப்பீடு:

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனை விவரம்:

பொள்ளாச்சி வழக்கில், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம்,

முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை

2-வது குற்றவாளியான திருநாவுக்கரசருக்கு 5 ஆயுள் தண்டனை

3-வது குற்றவாளியான சதீஷூக்கு 3 ஆயுள் தண்டனை

4-வது குற்றவாளியான வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை,

5-வது குற்றவாளியான மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை

6-வது குற்றவாளி பாபு-க்கு 1 ஆயுள் தண்டனை

7-வது குற்றவாளியான ஹெரன்பால்-க்கு 3 ஆயுள் தண்டனை

8-வது குற்றவாளியான அருளானந்தம் 1 ஆயுள் தண்டனை

9-வது குற்றவாளியான அருண்குமார் 1 ஆயுள் தண்டனை