தமிழ்நாடு

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள்: தப்பிச்செல்ல முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள்: தப்பிச்செல்ல முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு!
காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள்: தப்பிச்செல்ல முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு!
சென்னை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மத்திய அரசு தேர்வாணைய தேர்வுகளுக்குத் தயாராகி வரும் தாமஸ் ஆல்வா எடிசன், நேற்று இரவு தனது நண்பர்களுடன் புளியந்தோப்பிற்கு பிரியாணி சாப்பிட வந்துள்ளார். அப்போது, பைக்கில் வந்த ஹர்ஷித் மற்றும் சல்மான் பாஷா ஆகிய இருவரும், கத்தியைக் காட்டி மிரட்டி, தாமஸின் செல்போனைப் பறித்துச் சென்றுள்ளனர். உடனடியாக அவர் புளியந்தோப்பு போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.

போலீசார் மீது தாக்குதல், காவல் நிலையத்தில் ரகளை:

தகவலின் பேரில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார், ரவுடிகள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஹர்ஷித், ரோந்து காவலர் அய்யப்ப லிங்கத்தை எட்டி உதைத்துத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மற்றொரு ரவுடியான சல்மான் பாஷா, பீர் பாட்டிலை உடைத்து, காவலர் தீர்த்தமலையின் கையில் வெட்டிக் காயப்படுத்தினார்.

அவர்களைப் பல போராட்டங்களுக்குப் பிறகு புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோதும், இருவரும் போதையில் அட்டகாசம் செய்துள்ளனர். ஆபாசமாகத் திட்டிப் போலீசாரைத் தாக்க முயன்றதோடு, காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர்.

தப்பிச்செல்ல முயன்று எலும்பு முறிவு

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஹர்ஷித் மற்றும் சல்மான் பாஷா இருவரும் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது, தடுக்கி விழுந்ததாகவும், அதன் காரணமாக அவர்களின் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இரண்டு காவலர்களும், ரவுடிகள் இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

விசாரணையில், சல்மான் பாஷா மீது ஏற்கனவே 7 வழக்குகள் இருப்பதும், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற வழக்கும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. சிகிச்சை முடிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.