தமிழ்நாடு

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு எனப் பெண் வேதனை!

கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

 கோவையில் பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு எனப் பெண் வேதனை!
கோவையில் பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு எனப் பெண் வேதனை!
கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமாகி, திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைக்கழிப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உருக்கமான மனு அளித்தார்.

கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா. இவர் அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சிக்குச் சென்றபோது, அங்கிருந்த கிஷோர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வைத்துத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி, கிஷோர் அர்ச்சனாவை ஏமாற்றிப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில், அர்ச்சனா கருவுற்ற நிலையில், அவரைத் திருமணம் செய்துகொள்ளாமல் வேறு பெண்ணைத் திருமணம் செய்யக் கிஷோர் முடிவெடுத்துள்ளார். அர்ச்சனாவைத் தொடர்ந்து மிரட்டிக் கருவைக் கலைக்கக் கோரி, கிஷோரும் அவரது அக்கா யாழினி என்பவரும் வற்புறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அர்ச்சனா, கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இதுவரை காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாறாக அலைக்கழிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று மனு அளித்த அர்ச்சனா, தன்னைக் கரம் பிடிப்பதாகக் கூறி ஏமாற்றிய கிஷோர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது அவர் மீது உடனடியாகக் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.