தமிழ்நாடு

தர்பூசணி பழத்தில் ரசாயனம் இல்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தர்பூசணி பழத்தில் ரசாயனம் இல்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
தர்பூசணி பழத்தில் ரசாயனம் இல்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு விவசாய நலச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அதிகாரிகள் வேண்டுமென்றே பொதுமக்களிடையே தவறான பிரச்சாரத்தை பரப்பியதால், தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தவறான தகவலை பரப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் மற்றும் பிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், விவசாயிகள் உற்பத்தி செய்யும் தர்பூசணி பழங்களை அரசாங்கமே கொள்முதல் செய்து அதற்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

மேலும், தர்பூசணி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு கட்டும் வகையில், தர்பூசணி பழங்களில் எந்த ரசாயன மருந்தும் சேர்க்கப்படவில்லை என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.