தமிழ்நாடு

சிபில் ரிப்போர்ட் பார்த்து பயிர் கடனா? முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிபில் ரிப்போர்ட் பார்த்து பயிர் கடனா? முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை
Scrap CIBIL for Farm Loans: Tamilnadu Farmers Request to CM
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி முதல்வருக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

”கூட்டுறவு சங்கங்கள் என்பது விவசாயிகளின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டு நடைபெற்று வருபவைகளாகும். இதில் மத்திய - மாநில அரசுகள் ஒழுங்குபடுத்த முடியுமே தவிர கூட்டுறவு சங்கங்களை தானே பொறுப்பேற்று சட்டப்படி நடத்த முடியாது. ஆனால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர், இணை பதிவாளர்கள், துணை பதிவாளர்களை வைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை சுயமாக செயல்பட விடாமல் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மட்டுமே நடத்தி வருகிறார்கள்.

கடந்த 26-05-2025 அன்று தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மாநில பதிவாளர் அவர்கள் விவசாயிகள் கடன் அட்டை (Kissan Credit Card) மூலம் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு விவசாயிகளின் சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன, ஆனால் அந்த பயிர் கடன்கள் இரண்டு மடங்கு குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நெல்லுக்கு ஒரு ஏக்கர் பயிர் செய்ய 76 ஆயிரம் ரூபாய் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு செலவாகிறது, ஆனால் தமிழ்நாடு அரசு ரூ. 36,000 மட்டுமே பயிர் கடனாக வழங்கி வருகிறது. எனவே கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக, விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் கடன் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

சிபில் ஸ்கோர் பார்பதால் என்ன பிரச்னை:

இது போதாமல் வியாபாரிகளிடமும், இடைத்தரர்களிடமும், உரக்கடைகளிடமும் கடன் பெற்றுத்தான் விவசாயத்தை செய்து வருகின்றனர். மத்திய அரசினுடைய புள்ளி விவரங்களின்படி கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் தமிழ்நாட்டு விவசாயிகள் விவசாயத்தில் லாபம் பெற முடியவில்லை, விவசாயிகள் பயிர் கடனை கூட திருப்பி செலுத்த முடியாததால் அவ்வப்போது மாநில அரசும் கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. ஏற்கனவே விவசாயிகள் விவசாய மூலதன கடன், கோழிப்பண்ணை, விசைத்தறி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த சிறு - குறு தொழில்களுக்கும், கல்வி கடன், நகை கடன் ஆகியவற்றை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று விவசாயத்தில் சரியான வருமானம் இல்லாததால், செலுத்த முடியாததால், சிபில் ரிப்போர்ட் என்கிற பிரச்சினையில் சிக்கியுள்ளதால் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே விவசாயிகளின் ஒரே புகலிடமாக உள்ளது. இனிமேல் கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும் சிபில் ரிப்போர்ட்டில் பதிவேற்றம் செய்யப்படும், அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இனி விவசாயிகள் பயிர் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தங்க நகை கடன் மீதான கட்டுப்பாடுகள் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது என தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்து இருந்தார். எனவே இது மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கியின் உத்தரவு என்று சொல்லி கூட்டுறவுத் துறை தப்பித்துக் கொள்ள முடியாது என்பது தெளிவாக தெரிய வருகிறது.

மத்திய அரசு செய்ததே நீங்களும் செய்யலாமா?

மத்திய அரசை விவசாயிகள் நகை கடன் பெறுவதற்கு விதித்த நிபந்தனைகளை ரத்து செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போது மத்திய அரசு செய்த அதே போன்றதொரு செயலை தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறை செய்துள்ளது வேதனை அளிக்கிறது.

விவசாய கடன்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சிபில் ரிப்போர்ட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென இந்தியா முழுவதும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்து வரும்போது, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் கொடுப்பதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் மூலமாக சுற்றறிக்கை செய்திருப்பது என்பது ஏற்கனவே விவசாய உற்பத்தியில் பின்னடைவில் இருக்கும் தமிழ்நாட்டில், மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து படிப்படியாக விரட்டியடிக்கப்படும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் தஞ்சம் அடைவதை தடுத்து, தனியார் நிதி நிறுவனங்களிடமும் சிக்கி மீண்டும் அவர்கள் வாழ்க்கையை சிரமமாக்குவதற்கே இது போன்ற அறிவிப்புகள் உதவும். கூட்டுறவுத் துறையின் இந்த அறிக்கையானது விவசாயிகளிடையே தமிழ்நாடு அரசிற்கும், திமுகவின் ஆட்சிக்கும் மிகப்பெரிய அவப்பெயரையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் இந்த சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட வேண்டுமாய் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.