தமிழ்நாடு

645 காலிப்பணியிடம்.. வெளியானது TNPSC குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு

சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

645 காலிப்பணியிடம்.. வெளியானது TNPSC குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு
TNPSC Group 2 and 2A Exam Notification Released for 645 Vacancies
சமீபத்தில் தமிழகம் முழுவதும் TNPSC Group 4 தேர்வுகள் நடைப்பெற்று முடிந்த நிலையில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (குரூப்2 மற்றும் குரூப்2A) தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் தொகுதி IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் இன்று (15.07.2025) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைப்பெறும் நாள் எப்போது?

தேர்வர்கள் 15.07.2025 முதல் 13.08.2025 வரை தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு 28.09.2025 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டம்:

தொடர்ச்சியாக 13-வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 8 ஆண்டுகளில், முதன்முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி II மற்றும் IIA பணிகளுக்கான அறிவிப்பு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு தொகுதி IIA பணிகளின் தேர்வுத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு:

2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (குரூப்2 மற்றும் குரூப்2A) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தோராயமானதாகும். கலந்தாய்விற்கு முன்பாக அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளின் அடிப்படையில இடங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அறிவிப்பு குறித்த முழுமையான தகவலுக்கு TNPSC இணையதளத்தை பார்வையிடவும் அறிவுறுத்தப்படுகிறது.