தமிழ்நாடு

பீக் ஹவர்சில் தண்ணீர் லாரிகளுக்கு தடை.. காவல்துறை உத்தரவு

காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

பீக் ஹவர்சில் தண்ணீர் லாரிகளுக்கு தடை.. காவல்துறை உத்தரவு
Water trucks banned during peak hours
சென்னை, பெரம்பூரில் தண்ணீர் லாரி மோதி பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.

அதன்படி. கடந்த இரண்டு நாட்களாக நேர கட்டுப்பாட்டை மீறி இயங்கிய தண்ணீர் லாரிகள் உட்பட கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதனிடையே லாரிகள் இயங்காததால் சரியான நேரத்தில் குடி நீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாடு குடி நீர் வாரிய மேலாண் இயக்குநர் வினை உட்பட 30 அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பீக் ஹவர்சில் தண்ணீர் லாரிகளை இயக்காமல் போவதால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை நிலவுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், பீக் ஹவுர்ஸில் தேவையான தண்ணீர் லாரிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, காலை 7:30 மணி முதல் காலை 9 மணி வரை மெட்ரோ குடிநீர் லாரி இயங்க தடை விதிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், காலை 5 மணி முதல் 7:30 மணிக்குள் தண்ணீர் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாலை நேரங்களில் தண்ணீர் லாரிகள் எந்த எந்தெந்த குறுகிய சாலைகள் வழியாக செல்வது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பது குறித்த பட்டியலை 3 நாட்களுக்குள் தயாரித்து, அங்கு தண்ணீர் லாரிகள் செல்வதற்கான வழிவகைகள் செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.