அரசியல்

ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் "ரூ.5 லட்சத்தில் இருந்த மருத்துவ காப்பீடு தொகையை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.

ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
CM announces 5 lakh to 25 lakhs for medical insurance
தமிழ்நாடு மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டு பாதுகாப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஆகஸ்ட் 19) தொடங்கிய நிலையில், 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைக்கு தொடர்புடைய பல்வேறு திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

ரூ.25 லட்சமாக உயரும் மருத்துவ காப்பீடு:

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தற்போது ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவச் சிகிச்சை காப்பீட்டுத் தொகை, இனி ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக செலவு ஏற்படும் தீவிர நோய்கள் மற்றும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளுக்கு பொதுமக்களுக்கு கூடுதல் நிதிப் பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம்:

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கும் வகையில் "முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்" ரூ.673 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், கோவை, திருநெல்வேலி, மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சைக்கான தலைமை மையம் அமைக்கப்படும்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.84 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் கூடிய மண்டல புற்றுநோய் மையமும் அமைக்கப்பட உள்ளது.

பெரம்பூரில் 400 படுக்கைகள் கொண்ட உயர் சிறப்பு மருத்துவமனை:

சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதனுடன், அரசு மருத்துவமனைகளில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதிகளை மேம்படுத்த ரூ.106.17 கோடி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வியில் கூடுதல் இடங்கள்:

தரமான மருத்துவ சேவையை உறுதி செய்யும் நோக்கில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் கூடுதலாக 6,098 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.351 கோடி மதிப்பீட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதில் 660 பி.எஸ்.சி. செவிலியர் இடங்கள், 1,925 செவிலியர் கல்லூரி இடங்கள், 2,778 துணை மருத்துவப் படிப்பு இடங்கள் மற்றும் 735 மருத்துவியல் இடங்கள் அடங்கும். மேலும், தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கான மருத்துவ சேவைகள் விரிவாக்கம்:

திருநங்கைகளுக்கான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவச் சேவைகள் பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டு பாதுகாப்பை அதிகரிப்பது முதல் புற்றுநோய் சிகிச்சை, ரோபோடிக் அறுவை சிகிச்சை, மருத்துவக் கல்வி மற்றும் சிறப்பு மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவது வரை, சுகாதாரத்துறையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார்.