தமிழ்நாடு

"மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது"- சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம்!

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்குக் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.


CM Vijay
காவிரி நீர் விவகாரத்தில், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்குக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசுக்குத் தடை விதிக்கக் கோரி, முதலமைச்சர் விஜய் தனது அரசின் முதல் தனித் தீர்மானத்தை அவையில் முறைப்படி முன்மொழிந்தார். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழகத்தின் ஒட்டுமொத்த நதிநீர் உரிமையைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தின் மீது, தற்போது சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய் உரை

இந்தத் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் விஜய் பேசியதாவது, "கொள்கை நிலைப்பாட்டில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். ஆனால், மக்களுக்கு பிரச்னை என்றால் அனைவரும் மக்கள் பக்கம்தான் நிற்கும். மனசாட்சி உள்ள மக்களாட்சியாக இருப்பதே எங்கள் விருப்பம்.

நமது மக்கள், விவசாயிகளுக்காக நிற்பதே நமது கடமை, உரிமை. அதுதான் நமது உணர்வு, நீர் ஆதாரம்தான் வாழ்வாதாரம். நதிநீரைப் பாதுகாப்பது நம் அனைவருக்கும் உள்ளது. கட்சி வேறுபாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு, மக்களுக்காக ஓரணியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஒருமித்த கருத்தோடு அனைவரும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.

காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமலும், சமந்தப்பட்ட மாநிலம் மற்றும் மத்திய அரசின் அனுமதி பெறாமலும், கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது, கர்நாடக அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறோம். மேகதாது அணைக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் என எவ்வித அனுமதியும் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்திகிறோம்.

காவிரி படுகையில் எவ்வித நீர் தேக்கத்தையும் கர்நாடக அரசு கட்டக் கூடாது என்று அம்மாநிலத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் இந்த சட்டப்பேரவை ஆதரவை ஒருமனதாக தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்" என்று தெரிவித்தார்.