தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலைய திட்டம்: அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பரந்தூர் விமான நிலைய திட்டம்: அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
CM Vijay


சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது. கடந்த திமுக ஆட்சியில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் 13 கிராமங்களில் இந்த விமான நிலையம் திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்தத் திட்டம் அறிவித்தது முதல் அங்குள்ள மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், பரந்தூர் போராட்டக்களத்திற்கு நேரில் சென்ற முதல்வர் விஜய், விவசாய நிலங்களை அழித்துக் கட்டப்படும் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்திருந்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்ற நாள் முதல் நாள்தோறும் தலைமை செயலகம் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்றைய தினம் தலைமை செயலகத்திற்கு முதல்வர் விஜய் வருகை தந்தார்.

அங்கு பரந்தூர் விமானநிலையம் தொடர்பாக தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். அதில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு பதிலாக வேறு இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.