சினிமா

படத்தோட கடைசி ஒரு மணி நேரம்.. கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஓபன் டாக்

"கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது" என கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஆண்டனி பேசியுள்ளார்.

படத்தோட கடைசி ஒரு மணி நேரம்.. கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஓபன் டாக்
Kannappa movie pre release Event
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், நடிகர் சரத்குமார், படத்தொகுப்பாளர் ஆண்டனி, நடிகர் சம்பத் ராம் மற்றும் படத்தை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் கலந்துகொண்டு படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

படம் குறித்து கிறிஸ்தவனான நானே சொல்றேன்: எடிட்டர் ஆண்டனி

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில், “மோகன் பாபு சார் மற்றும் விஷ்ணு மஞ்சுக்கு நன்றி. இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் சக்திவேலனுக்கு நன்றி. சரத்குமார் சார் எனக்கு சிறந்த நண்பர். இந்த படத்தில் மூன்று டிராக்குகள் இருக்கிறது. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய ஒருவர் எப்படி தீவிர சிவபக்தராக மாறுகிறார், காதல் கதை மற்றும் ஒரு கிராமத்தை கைப்பற்ற நடக்கும் யுத்தம், என்று மூன்று டிராக்குகள் இருப்பதால் சிலருக்கு படம் நீளமாக இருப்பது போல் தோன்றும், ஆனால், அந்த உணர்வே உங்களுக்கு ஏற்படாத வகையில் படம் கிரிப்பாக இருக்கும். இதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சரத் சார் நடித்திருக்கிறார். சூப்பராக நடித்திருக்கிறார், இன்னும் 25 வருடங்கள் அவர் நடிப்பார். ஒரு காட்சியில் இரண்டு பேரை அப்படியே தூக்குகிறார், ரியலாக எடுத்திருக்கிறார்கள். அந்த காட்சியை பார்த்ததும் சரத் சாருக்கு போன் போட்டு, சூப்பர் சார் என்று சொன்னேன்.

இந்த படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது, கதையை மிக சிறப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இறுதியில் நீங்கள் நிச்சயம் கண்கலங்குவீர்கள். எனவே இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்து படங்களிலும் பிளஸ் மற்றும் மைனஸ் இருக்கும், நீங்கள் பிளஸை மட்டும் மக்களிடம் எடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும், நன்றி.” என்றார்.

கடவுள் பத்தி உள்ளவர்களுக்கு செம ட்ரீட்:

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், “சரத்குமார் சார் ஒரு நாள் எனக்கு போன் போட்டு, கண்ணப்பா படத்தை தமிழ்நாடு ரிலீஸ் பண்றீங்களா? என்று கேட்டார். சார், இது எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு சார், என்று சொன்னேன். பிறகு கண்ணப்பா படத்தை தமிழ்நாட்டில் நல்லபடியாக ரிலீஸ் பண்ணிக் கொடுத்துடுங்க என்றார். பொதுவாக சினிமா வியாபாரத்தில் சில பேச்சுவார்த்தைகள் நடக்கும், எப்படி பண்ண போகிறோம் என்ற ரீதியில் சில ஆலோசனைகள் நடக்கும், என்று எதிர்பார்த்தேன். அப்போது அங்கிருந்து எனக்கு விஷ்ணு மஞ்சு சார் போன் போட்டார். அவ்வளவு பெரிய ஹீரோ, பான் இந்தியா பட ஹீரோ அவரே எனக்கு போன் போட்டது ஆச்சரியமாக இருந்தது. அவர் இரண்டு விசயங்களை மட்டுமே சொன்னார், எங்க குழந்தையை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம், நல்லபடியாக ரிலீஸ் பண்ணுங்க, என்று சொன்னார். சினிமா மீது உள்ள காதல் தான் அவரை இப்படி சொல்ல வைத்தது என்று நினைக்கிறேன். பிறகு டிரைலர் பார்த்தேன், அதில் அவர் சிவலிங்கத்தை கட்டிப்பிடிப்பார், அந்த காட்சியை பார்க்கும் போது, அவர் பேசிய வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்தது. இந்த படத்தை அவர் எவ்வளவு காதலித்திருக்கிறார், என்பது அந்த சிவலிங்கத்தை அவர் கட்டிப்பிடிப்பதிலே தெரிந்தது. இங்கே இருப்பவர்கள் கண்ணப்பா கதையை சிறு வயதில் இருந்தே கேட்டிருப்போம். ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட நாம் காலகாலமாக கேட்டு வந்த கதைகளை நாம் திரையில் பார்க்கும் போது, அது அவர்களை தொடர்புபடுத்திக் கொள்ளும். இந்த கண்ணப்பா படத்தை பொறுத்தவரை சிவபக்தி மற்றும் கடவுள் பக்தி உடையவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். மிகப்பெரிய நட்சத்திரங்கள், பிரம்மாண்டமான காட்சி அமைப்பு என படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது.

இதில், சரத்குமார் சார் மிக சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறார், அவர் வேடம் என்ன என்பது டிரைலரில் தெரிகிறது. ஆன்மீகவாதியாக நடித்திருக்கிறார். அவர் தசரதன் படத்தில் கடவுள் பக்தி இல்லாதவராக நடித்திருப்பார், ஆனால் இதில் கடவுள் பக்தி உடையவராக நடித்திருக்கிறார். இந்த படம் பட்டிதொட்டி எல்லாம் வெற்றி பெற வேண்டும். இந்த படத்தை நிறைய உழைப்புகளோடும், கனவுகளோடும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆண்டனி சாரின் கத்திரி மட்டுமே பேசும், அவர் பேச மாட்டார். ஆனால், அவரே இங்கு அதிகம் பேசியிருக்கிறார் என்றால் இந்த படம் எப்படி வந்திருக்கும் என்று பாருங்கள். சம்பத் ராம் சார் இந்த படத்தின் சிறு சிறு அப்டேட்களை கூட சோசியல் மீடியாவில் போட்டுக் கொண்டிருந்தார். மிகப்பெரிய உழைப்பை போட்டு பண்ணக்கூடிய படங்கள் அனைத்திற்கும் பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். இந்த படத்தையும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.

கண்ணப்பா படத்தில் கிடைத்த கௌரவம்:

நிகழ்ச்சியில் நடிகர் சம்பத்ராம் பேசுகையில், “மேடையில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம், சரத்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, ‘அரசு’ படத்தில் இருந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அரசு படத்தின் போது அவர் என்னை கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் அறிமுகப்படுத்தி, இவருக்கு எதாவது நல்ல கேரக்டர் கொடுங்க என்று சொன்னார், எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்கிறார், அவருக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சைனர் என்ற கன்னட படத்தில் நடித்தேன், அதற்கு ஆண்டனி சார், தான் எடிட்டிங். அவர் சிறந்த எடிட்டர் என்பது தெரியும், இந்த படத்தில் அவரது பணி பெரிய அளவில் பேசப்படும். கடந்த வாரம் ஐதராபாத்தில் கண்ணப்பா வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. அதில், பங்கேற்ற அனைவரும் சொன்னது என்னவென்றால் பிரபாஸ் சாரின் அறிமுகத்திற்குப் பிறகு படம் மிக சிறப்பாக இருக்கும் என்றார்கள். அவங்க எல்லோரும் அடிமனதில் இருந்து மகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார்கள். இந்த படம் நிச்சயமாக நூற்றுக்கு நூறு வெற்றி படமாக இருக்கும் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸியின் இசை மிக சிறப்பாக இருந்தது. சென்னையில் மிகப்பெரிய அளவில் கண்ணப்பா நிகழ்ச்சி நடத்த இருந்தோம். ஆனால், இந்தியா முழுவதிலும் இருந்து நட்சத்திரங்கள் வர வேண்டி இருந்தது, நேரம் இல்லாததால் அது நடக்கவில்லை. அதனால் தான் சிறு குழுவாக நாங்கள் உங்களை சந்திக்கிறோம். படம் மிக சிறப்பாக இருக்கிறது, படத்தை ரசிகர்கள் பார்த்தப் பிறகு அவர்கள் பலரிடம் படத்தை பற்றி சொல்வார்கள். எனவே, ஊடகங்கள் இந்த படத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு, கண்ணப்பா படத்தில் வாய்ப்பளித்த மோகன் பாபு சாருக்கு நன்றி. என் நண்பர் மூலம் அவரிடம் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அதில் இருந்து அவரை நான் பின் தொடர்ந்தேன். அதன்படி எனக்கு அவர் மூன்றாவது முறையாக வாய்ப்பளித்திருக்கிறார். அவர் இல்லை என்றால் இந்த படத்தில் நான் இல்லை, எனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்த மோகன் பாபு சார், விஷ்ணு மஞ்சு சார் இருவருக்கும் நன்றி. நான் இதுவரை 10 தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறேன், எனக்கும் தனியாக போஸ்டர் வெளியிட்டு என் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியது கண்ணப்பா படத்தில் தான் முதல் முறையாக நடந்திருக்கிறது. இதுவரை எந்த படத்திலும் எனக்கென்று தனி போஸ்டர் வெளியிட்டதில்லை. எனக்கு இதுவே மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. இவ்வளவு வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த எனக்கு இது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது, நன்றி” என்றார்.