சினிமா

வாழா என் வாழ்வே வாழவே: 100 வது படம்.. கார்த்திக் நேத்தாவின் அன்பு மடல்!

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ’குட் டே’ திரைப்படத்தின் மூலம் 100-படங்களுக்கு பாடல் எழுதி சாதனை புரிந்துள்ளார். இதுத்தொடர்பாக ரசிகர்களுக்கு அன்பு மடல் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.

வாழா என் வாழ்வே வாழவே: 100 வது படம்.. கார்த்திக் நேத்தாவின் அன்பு மடல்!
Lyricist Karthick Netha Reaches 100-Film Milestone with 'Good Day' tamil movie
New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N.அரவிந்தன் இயக்கத்தில், சமூக படைப்பாக உருவாகியுள்ள “குட் டே” திரைப்படம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம், 100 படங்களுக்கு பாடல் எழுதி புதிய மைல்கல்லை தொட்டுள்ளார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.

தமிழ் சினிமா எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான், தேவா, யுவன், ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாரயணன், அனிருத் என எப்படி காலத்தால் அழிக்க முடியாத இசையமைப்பாளர்களை கண்டறிந்ததோ, அதைப்போல் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பாடலாசிரியர்களையும் கண்டறிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தலைசிறந்த பாடல்களின் வரிகளுக்கு சொந்தக்காரர் என ஒரு பட்டியல் எடுத்தால் கண்ணதாசன், வாலி, கங்கை அமரன், வைரமுத்து, நா.முத்துகுமார், கபிலன், யுகபாரதி, பா.விஜய் என ஒரு பட்டியல் நீளும். அந்தப்பட்டியலில் கண்டிப்பாக கார்த்திக் நேத்தாவின் பெயரும் இடம் பெறும்.

96 படத்தில் இடம்பெற்றிருக்கு லைஃப் ஆப் ராம் பாடலின் வரிகள் மட்டும் போதும்.. காலம் கடந்தும் தமிழ் சினிமாவில் கார்த்திக் நேத்தாவின் பெயர் ஒலித்துக் கொண்டு இருக்கும். 2005 ஆம் ஆண்டு தொட்டி ஜெயா படத்தில் யுவனின் இசையில் உருவாகிய “இந்த ஊரு” பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த கார்த்திக் நேத்தா 20 ஆண்டுக்கால பெரும் ஓட்டத்திற்கு நடுவில் தனது பாடல் வரிகளால் 100-வது படத்தினை எட்டியுள்ளார்.

இந்த தருணத்தில் மனம் நெகிழ்ந்து எழுதிய அன்பு கடிதம் ஒன்றினை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளவை விவரம்:



“GOOD DAY!

பாட்டு எழுத சென்னைக்கு வந்து பாதைகள் பல மாறிய கவிஞன் எனக்கு, வெளிவர இருக்கிற "GOOD DAY" திரைப்படம் நூறாவது படம். 2005 இல் தொடங்கிய பயணம். இருபது ஆண்டுகளில் நூறு படங்கள் என்பதும் நூற்றிச் சொச்சம் பாடல்கள் என்பதும் பெரும் சாதனை ஒன்றுமில்லை. ஆனால் இந்தப் பயணத்தில் காலமும் வாழ்க்கையும் கற்றுத் தந்திருப்பவை ஏராளம். ஒரு PESSIMIST ஐ OPTIMIST ஆக மாற்றிய மனிதர்களின் அன்பிற்கும் வாழ்க்கையின் அருளுக்கும் என்றும் நன்றி.

வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடிய பாடகர்கள், பத்திகள் பல எழுதிப் பரவலாகக் கொண்டு சேர்ந்த பத்திரிகையாளர்கள், பாடல்களில் கவிதை செய்ய விழையும் என் போன்றோர்க்குப் பெரும் ஊக்கமளித்து வரவேற்கும் மக்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

பெரிதினும் பெரிது செய்ய விழைவேன். இந்நேரத்தில் கண்ணதாசனையும், அறிவுமதி அண்ணனையும், என்னன்பு நா.முத்துக்குமாரையும் தழுவிப் பணிகிறேன். குடும்பத்தார்க்கு எனது நன்றி.

"என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தை யான் பாலித்திடல் வேண்டும்" என்ற பாரதியைப் போல நானும் பாடல் வழி, எழுத்தின் வழி பெரும்பிழம்பாய்ப் பிறப்பெடுக்கவே விரும்புகிறேன். வழிப்போக்கர்களின் நினைவில் ஒரு கதையாக, வாழ விரும்புவோரின் அகத்தில் ஓர் ஊக்கப்பாடலாக நின்று நிலைபெற அருள்வாய் தமிழ்ப் பேரணங்கே!” என குறிப்பிட்டுள்ளார்.