அரசியல்

'பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க'- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக!

ஃபாக்ஸ்கான் ரூ. 15,000 கோடி முதலீட்டை மறுத்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், தி.மு.க. அரசு பொய் கூறியதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. "இது 'விடியா ஆட்சி' அம்பலப்பட்டு வீழப் போவதற்குச் சாட்சி" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

'பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க'- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக!
ADMK criticizes Chief Minister Stalin
ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தி.மு.க. அரசு அறிவித்தது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீட்டுப் பேச்சுவார்த்தைகளை மறுத்துவிட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், அ.தி.மு.க. தலைமை முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

அ.தி.மு.க.வின் விமர்சனப் பதிவு

அ.தி.மு.க. தனது அதிகாரபூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஃபாக்ஸ்கான் நிறுவனம், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது. முதல்வரோ, இது தான் "செயலில் ஸ்டாலின் மாடல்" என்று மார்தட்டிக் கொண்டார்.

இந்நிலையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம், அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. "பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க" என்ற ஸ்டாலினின் பொன்மொழியை, அவருக்கே நினைவுபடுத்த விழைகிறோம். ஏனெனில், பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும்.

ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் முதல்வர், அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது என்னவென்று கேட்டால், அதற்கு இவர்களின் பதில், "வெற்று பேப்பர்"! அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? நேற்று அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி.

கூகுள் நிறுவனம் கூட, பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று அறிவித்துள்ளது. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத, திறமையற்ற முதல்வரிடம் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் வளமான தமிழ்நாட்டைக் கட்டமைக்க ஒரே வழி, 2026-ல் அதிமுக ஆட்சி அமைவதே" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டிஆர்பி ராஜாவின் எக்ஸ் பதிவு

முன்னதாக நேற்று, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது 'எக்ஸ்' பக்கத்தில் "ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்வது உறுதியான, எந்தவித தவறும் இல்லாத உண்மை செய்தி. நடப்பு வர்த்தக சூழல் தெரியாமல் அல்லது புரிந்துகொண்டு நடிப்பவர்களுக்கு எதையும் சொல்ல முடியாது. வேலைவாய்ப்பு உறுதியாகி நல்லது நடக்கும்போது காழ்ப்புணர்ச்சி கொள்கின்றனர்" என்று பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.