அரசியல்

அதிமுகவினை சீண்ட வேண்டாம்: திமுகவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான அவதூறு கார்ட்டூன் விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வை உண்டாக்கியுள்ளது. திமுக ஐடி விங் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மீது அதிமுக தரப்பில் மாவட்டந்தோறும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

அதிமுகவினை சீண்ட வேண்டாம்: திமுகவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
Former Health Minister Dr.C.Vijayabaskar issued a stern warning to the DMK
புதுக்கோட்டை: "சாது மிரண்டால் காடு கொள்ளாது; அதிமுகவை சீண்டிப் பார்க்க வேண்டாம். சீண்டிப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள்," என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திமுகவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை அவதூறாகச் சித்தரித்து திமுக ஐடி விங் சமூக வலைத்தளங்களில் கார்ட்டூன் வெளியிட்டதை அடுத்து இந்த கண்டனத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு திமுக ஐடி விங் சமூக வலைத்தள பக்கத்தில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சிக்கும் வகையில் ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதற்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுத்தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும், அதிமுக நிர்வாகிகள் சார்பில் திமுக ஐடி விங் மீது காவல்நிலையத்தில் நேற்றையத் தினம் புகார் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது நடவடிக்கைக் கோரி, விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் ஆறு புகார் மனுக்களை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், "மருத்துவப் பணியாளர் தேர்வு ஆணையம் (MRB) அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு நான்காயிரம் பணியிடங்கள் MRB மூலம் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்பப்பட்டன. ஆனால், திமுகவின் நான்காண்டு கால ஆட்சியில் நான்காயிரம் பேர் கூட நியமிக்கப்படவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்," என்று குற்றம்சாட்டினார். தமிழக சுகாதாரத்துறை தற்போது மிகப்பெரிய தள்ளாட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டு தமிழகத்தை ஆளப்போகும் முதலமைச்சராக வரவுள்ள எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு கார்ட்டூன் வெளியிட்டது கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்ட விஜயபாஸ்கர், "2026 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், இதுபோன்று எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிப்பது திமுகவுக்கு நல்லதல்ல. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; சரியான பாடத்தை 2026-ஆம் ஆண்டு கொடுப்பார்கள். 2026 தேர்தலை மனதில் கொண்டாவது, இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வலியுறுத்தினார்.

மேலும், கீழடி விவகாரம் குறித்தும் பேசிய அவர், கீழடி அகழாய்வுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன என்றும், இதை மடைமாற்றி கீழடி விவகாரத்தை திமுகதான் செய்தது போன்று பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.