அரசியல்

காஞ்சிபுரத்தில் புதுமுகம்?- திமுகவின் ரகசிய சர்வேயில் வெளியான அதிரடித் தகவல்கள்!

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவில் சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கு சீட் என கூறப்படுகிறது.அந்த பட்டியலில் காஞ்சிபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

காஞ்சிபுரத்தில் புதுமுகம்?- திமுகவின் ரகசிய சர்வேயில் வெளியான அதிரடித் தகவல்கள்!
Kanchipuram
மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இதற்காக சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வியூகங்களை ஸ்டாலின் வகுத்து வருகிறார். கூட்டணியில் புதிய கட்சிகளை திமுக இணைத்து வருகிறது. தேர்தல் வெற்றி தொடர்பாக பல்வேறு சர்வேக்களையும் திமுக அடிக்கடி எடுத்து வருகிறது.

தற்போது திமுக சிட்டிங் எம்எல்ஏக்களின் செயல்பாடு குறித்து திமுக சர்வே எடுத்துள்ளது. அந்த சர்வேயில் 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மீண்டும் சீட் வழங்க வேண்டாம் என ஸ்டாலின் சர்வே நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது.அதில் காஞ்சிபுரம் தொகுதியும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பவர் எழிலரசன்.

மாணவரணி செயலாளராக இருந்தவர் எழிலரசன். இந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு விவகாரம் என எதிலும் சரிவர செயல்படுத்தவில்லை என அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது செய்தி தொடர்பாளராக மட்டும் எழிலரசன் இருந்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த இவர். சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் திமுக தலைமை இடம் அளிக்கவில்லை.

இவரது செயல்பாடு மீது தொகுதி மக்கள் அதிருப்தியாக இருப்பதாக சர்வே அறிக்கையில் கூறியுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என 4 பேரை பரிந்துரை செய்து லிஸ்ட் கொடுத்துள்ளது. அந்த லிஸ்ட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ராதாகிருஷ்ணன் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர், யுவராஜ் முதலியார் சமூகத்தை மற்ற இருவர் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள்.

சர்வே நிறுவனம் கொடுத்த அறிக்கையில் 2021-ம் ஆண்டு 345 கட்சி நிர்வாகிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் என பொற்கிழி வழங்கியது. 2023ம் ஆண்டு மதுராந்தகத்தில் நடைபெற்ற இளைஞரணி நிகழ்ச்சியில் 100 கட்சி நிர்வாகிகளுக்கு தலா ரூ 10 ஆயிரம் வழங்கப்பட்டது. 2025ம் ஆண்டு காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. இந்த முன்று நிகழ்ச்சிகளும் இளைஞரணி செயலாளர் உதயநிதியை வைத்து யுவராஜ் நடத்தி இருப்பதை குறிப்பிட்டுள்ளது.

திமுக தலைமையும் காஞ்சிபுரத்தில் புதுமுகத்திற்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இளைஞரணி நிர்வாகிகளுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என உதயநிதியும் திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் காஞ்சிபுரம் தொகுதியில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ்க்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.