தமிழ்நாடு

சுவிட்சர்லாந்து போல நீலகிரியில் ரூ.5 கோடியில் திட்டம்-ஆ.ராசா எம்.பி

தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விலையில்லா தனி வீட்டு மனை பட்டா வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என ஆ.ராசா புகழாரம்

சுவிட்சர்லாந்து போல நீலகிரியில் ரூ.5 கோடியில் திட்டம்-ஆ.ராசா எம்.பி
நீலகிரி எம்.பி.ஆ.ராசா
47 ஆண்டுகளுக்கு பிறகு பழங்குடியினருக்கான விலையில்லா வீட்டுமனை பட்டாவை இன்று உதகையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வழங்கினார். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பனியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட 7 வகையான பழங்குடியினத்தைச் சேர்ந்த 32 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

பட்டா வழங்க முதலமைச்சர் ஆணை

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பழங்குடியினர் வசிக்கும் குடியிருப்புகளுக்கு தற்போதைய காலகட்டம் வரை கூட்டு பட்டா மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதனால் பழங்குடியினர்கள் தங்கள் தேவைகளுக்கு கல்வி கடனும் வீட்டுக்கடனும் என எதுவும் பெற முடியாத நிலை இருந்தது.

Image

இந்நிலையில் அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தங்களுக்கு தனித்தனியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை கனிவோடு பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவர் பெயரில் பழங்குடியினர்களுக்கு தனி வீட்டுமனை பட்டா வழங்க ஆணையிட்டார்.

சுவிட்சர்லாந்தில் உள்ளதைபோல் திட்டம்

இதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்ட சுமார் 1128 பழங்குடியினருக்கு பட்டா வழங்க குடும்ப தலைவர்கள் பெயர் தேர்வு செய்யப்பட்டு அதில் முதல் கட்டமாக இன்று உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் பழங்குடியினர்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பழங்குடியினருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவை வழங்கினார். முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தும், புதிய வளர்ச்சி திட்ட பணிகளையும் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் உரையாற்றி அவர், “இங்கிலாந்து, ஐரோப்பா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள திட்டத்தை போல் அனைத்து சுற்றுலா தளங்களையும் கண்டு ரசித்து மீண்டும் அதே இடத்தில் இறக்கி விடுவதுபோல் நீலகிரி மாவட்டத்திலும் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரே கட்டணத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில் விரைவில் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். விரைவில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என கூறினார்.

அதிநவீன கார் பார்க்கிங் வசதி

மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் உதகையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினர் மூலம் கணக்கெடுப்பு செய்து தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு தனித்தனி பட்டாக்கள் வழங்கியதற்கு இந்த அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் பழங்குடியின மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர் எனக் கூறினார்.