இந்தியா

ஹனிமூன் ஜோடி மிஸ்ஸிங் வழக்கில் ட்விஸ்ட்.. வழிகாட்டி கொடுத்த துப்பு: 4 பேர் கைது

புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹனிமூன் ஜோடி மிஸ்ஸிங் வழக்கில் ட்விஸ்ட்.. வழிகாட்டி கொடுத்த துப்பு: 4 பேர் கைது
honeymoon couple missing case at meghalaya
ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகிய இருவருக்கிடையேயான திருமணம் கடந்த மே 11 ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த ஜோடி தேனிலவிற்காக மேகாலயா சென்ற நிலையில் ராஜா ரகுவன்ஷி மர்மமான முறையில் ஜூன் 2 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவி காணாமல் போயிருந்தார். ஹனிமூன் ஜோடிக்கு என்ன ஆனது? என்கிற செய்தி இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியது.

காணாமல்போனஹனிமூன்ஜோடி:

புதுமணத் தம்பதியினர், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரிலிருந்து மே 20 ஆம் தேதி கிளம்பி மே 22 ஆம் தேதி மவ்லகைட் கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் தம்பதியினர் நோங்ரியாட்டில் உள்ள ஒரு தங்குமிடத்திலிருந்து கிளம்பி வாடகை ஸ்கூட்டர் ஒன்றில் வழிகாட்டி துணை இல்லாமல் மவ்லகைட் கிராமத்தினை சுற்றி பார்க்க சென்றுள்ளனர்.

மே 24 அன்று, ஷில்லாங்கிலிருந்து சோஹ்ரா செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர்களின் ஸ்கூட்டர் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. புதுமணத் தம்பதியினரை அணுக அவர்களது குடும்பத்தினர் முயற்சித்த போது, எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதன் பின்னர் தான் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற காவல்துறை விசாரணையில், வாடகை ஸ்கூட்டர் ஒன்றினை எடுத்துக்கொண்டு மவ்லகைட் கிராமத்தை சுற்றிப்பார்க்க சென்ற அந்த தம்பதியினர், சோஹ்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட நோங்ரியாத் கிராமத்தில் உள்ள பிரபலமான வேர்ப் பாலங்களைப் (Root bridges) பார்வையிட பள்ளத்தாக்கில் 3000-க்கும் மேற்பட்ட படிகள் நடந்து டிரெக்கிங் சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

சடலமாகமீட்கப்பட்டகணவர்:

ஆரம்பத்தில் உள்ளூர் கிராமவாசிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை திட்டமிடப்பட்டது. ஆனால், பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், மே 27 ஆம் தேதி, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மேகாலாய முதல்வர் கான்ராட் சங்மாவிடம் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து ட்ரோன்கள், மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் பணி வேகமெடுத்தது.

மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் சோஹ்ரா பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஜூன் 2 ஆம் தேதி, ராஜா ரகுவன்ஷி சடலமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இரத்தக்கறை படிந்த ஆயுதத்தையும் போலீசார் மீட்டனர். இவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு மழைக்கோட்டும் கண்டெடுக்கப்பட்டது.

சுற்றுலாவழிகாட்டிகொடுத்ததுப்பு:

ராஜா ரகுவன்ஷி உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி சோனம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. அவர் கடத்தப்பட்டுள்ளரா? கொலை செய்யப்பட்டுள்ளரா? என்கிற கோணத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது.

மேகாலயாவில் சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்டு வரும் ஆல்பர்ட் பிடே என்பவர், “சோனம் மற்றும் ராஜா ரகுவன்ஷி தம்பதியினருடன், 3 ஆண் சுற்றுலா பயணிகளும் உடன் இருந்தனர். அவர்கள் இந்தி மொழியில் பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு இந்தி மொழி தெரியாது என்பதால், அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு புரியவில்லை. அவர்கள் டிரெக்கிங் செய்வதற்கு முந்தைய நாள், நான் வழிகாட்டவா என்றேன். அதற்கு அவர்கள் எனது சேவையை மறுத்து மற்றொரு வழிகாட்டியுடன் செல்ல திட்டமிட்டனர். ஆனால், மறுநாள் அவர்கள் டிரெக்கிங் செல்லும் போது அந்த வழிகாட்டி இல்லை” என துப்பு கொடுத்துள்ளார்.

மனைவிஉட்பட4பேர்கைது:

இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையானது தம்பயினர் உடன் பயணித்த 3 நபர்களை தேடும் பணிக்கு திரும்பியது. இந்நிலையில், ஒருவர் உ.பி.யில் இருந்தும், மேலும் இரண்டு குற்றவாளிகள் இந்தூரில் இருந்தும் சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டு வந்த ராஜாவின் மனைவி, சோனம் உ.பி.யில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் கூலிப்படையினை ஏவி கணவரை சோனம் கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் பேசுப்பொருளாக விளங்கிய ஹனிமூன் ஜோடி வழக்கில், மனைவியே கூலிப்படை வைத்து கணவரை கொலை செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.