இந்தியா

இது அது ல.. வடிவேலு பட பாணியில் தந்தையை கூரியர் செய்ய முயன்ற மகள்!

பெங்களூருவில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சமூக வலைதளத்தில் 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற ஒரு குடும்பத்தின் வினோத முயற்சி விபரீதத்தில் முடிந்தது.

இது அது ல.. வடிவேலு பட பாணியில் தந்தையை கூரியர் செய்ய முயன்ற மகள்!
Bengaluru
கர்நாடகாவில் ஒரு குடும்பம் வடிவேலு பட பாணியில் கூரியர் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான 'முருகா' திரைப்படத்தில், பேருந்து கட்டணத்தை மிச்சப்படுத்த ஒரு குடும்பத்தையே மூட்டை கட்டி கூரியர் அனுப்ப முயலும் நகைச்சுவைக் காட்சி இடம்பெற்றிருக்கும். அதே பாணியில் பெங்களூருவின் வையாலிக்காவல் பகுதியில் உள்ள ஒரு கூரியர் அலுவலகத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஒரு பெரிய சாக்கு மூட்டையுடன் வந்துள்ளனர். அந்த மூட்டையை மங்களூருவுக்குப் பார்சல் அனுப்ப வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்

மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று ஊழியர்கள் கேட்டபோது, அந்தக் குடும்பத்தினர் முறையாகப் பதில் சொல்ல மறுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் மூட்டையைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு முதியவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த மூட்டைக்குள் இருந்த முதியவர் போதிய காற்று வசதி இல்லாமல் மூச்சு விடத் திணறிக்கொண்டிருந்தார். உடனடியாக ஊழியர்கள் அவருக்குத் தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தனர்.

பிடிவாதமான வாதமும் தப்பித்த ஓட்டமும்

உள்ளே ஒரு மனிதர் இருப்பதைச் சுட்டிக்காட்டிய பின்பும், "நாங்கள் பார்சல் கட்டணம் செலுத்தத் தயார், இதனை அனுப்பி வையுங்கள்" என்று அந்தக் குடும்பத்தினர் பிடிவாதமாக வாதிட்டுள்ளனர். நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வருவதைக் கண்டதும் அந்தக் குடும்பத்தினர் அங்கிருந்து அவசரமாகத் தப்பிச் சென்றனர்.

விசாரணையில் வெளியான 'ரீல்ஸ்' மோகம்

பின்னர் போலீசாரால் பிடிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தினர் அளித்த விளக்கம் அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்தியது. உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை காலத்தில் பேருந்து கட்டண உயர்வு மற்றும் டிக்கெட் தட்டுப்பாட்டைக் கண்டித்து, சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக இப்படி ஒரு வீடியோ எடுக்க முயன்றதாக அவர்கள் கூறினர். அந்த மூட்டைக்குள் இருந்த முதியவர், அந்தப் பெண்ணின் தந்தை என்பது விசாரணையில் உறுதியானது.

எச்சரிக்கையுடன் விடுவிப்பு

தனது தந்தை ஊருக்குச் செல்ல டிக்கெட் கிடைக்காத ஆத்திரத்தில் இப்படிச் செய்ததாக அந்தப் பெண் கூறினார். எனினும், முதியவரின் உயிர் போகும் அபாயம் இருந்ததை உணர்த்திய போலீசார், அவர்களுக்குக் கடுமையான புத்திமதி கூறினர். இறுதியில் அவர்களின் அறியாமையைக் கருத்தில் கொண்டு, ஒரு மன்னிப்புக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.