இந்தியா

"டீம் கல்கி" நெட்வொர்க் காலி! டார்க்நெட் மூலம் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!

டார்க்நெட் மூலம் போதைப்பொருள் கடத்திய 'டீம் கல்கி' கும்பலை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு முறியடித்தது.


Drug Mafia
டார்க்நெட் மற்றும் ரகசிய செயலிகள் வழியாக இந்தியா முழுவதும் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த "டீம் கல்கி" என்ற கும்பலை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த அதிரடி சோதனையில் எல்.எஸ்.டி , எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடத்தப்பட்ட சோதனையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படவிருந்த 13 பார்சல்கள் மற்றும் நெதர்லாந்தில் இருந்து வந்த 2 பார்சல்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் 2,338 எல்.எஸ்.டி , ஸ்டிக்கர்கள், 77.5 கிராம் எடையுள்ள 160 எக்ஸ்டஸி எனப்படும் எம் டி எம் ஏ மாத்திரைகள், 3.6 கிலோ திரவ வடிவ எம்.டி.எம்.ஏ , 73.6 கிராம் சரஸ் மற்றும் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன.

"டீம் கல்கி" குழு அமைப்பு

இந்த போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியதில் மிகப்பெரிய நெட்வொர்க் செயல்படுவது தெரியவந்துள்ளது. இந்த நெட்வொர்க்கை இயக்கி வந்த அனுராக் தாக்கூர் மற்றும் அவரது கூட்டாளி விகாஸ் ரதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் எனும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி திகார் சிறையில் இருந்தபோது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கமே சிறையிலிருந்து வெளியே வந்ததும் "டீம் கல்கி" என்ற பெயரில் இந்த சட்டவிரோத போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

டார்க்நெட் தளம்

குறிப்பாக இவர்கள் 'Dread' என்ற டார்க்நெட் தளம் மற்றும் 'Session' என்ற ரகசியச் செயலி மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்களது சேவைக்கு அந்தத் தளத்தில் 4-ஸ்டார் மதிப்பீடு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நெதர்லாந்து, போலந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள சர்வதேச கடத்தல்காரர்களிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கி, இந்தியா முழுவதும் ஸ்பீட் போஸ்ட் மற்றும் கூரியர் மூலம் மருந்துகள் கடத்தப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"டெட் டிராப்" டெலிவரி & பணம் பரிவர்த்தனை

டெல்லியின் சில பகுதிகளில் "டெட் டிராப்" (Dead Drop) என்ற முறையை கையாண்டுள்ளனர். அதாவது, ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில் பார்சலை வைத்துவிட்டு, அதன் இருப்பிடத்தை மட்டும் வாடிக்கையாளருக்குத் தெரிவிப்பார்கள். இதன் மூலம் நேரடித் தொடர்பைத் தவிர்த்து போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்காக பணத்தைப் பெற்றுக்கொள்ள மோனெரோ (Monero) மற்றும் அமெரிக்க டாலர், கிரிப்டோ கரன்சிகளைப் பயன்படுத்தியுள்ளனர். பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதை மறைக்க பல்வேறு வாலட்கள் மற்றும் போலியான கேஒய்சி கணக்குகளை இவர்கள் கையாண்டுள்ளனர். மேலும் பணத்தை கைமாற்றுவதற்காக 10 சதவீதம் கமிஷன் அளித்து போதைப் பொருள் கும்பல் பணத்தை கைமாற்றியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய மாநிலங்களே இலக்கு

ஜனவரி 2025 முதல் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பார்சல்களை இவர்கள் அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்ட விரோதமாக மற்றும் நூதன முறையில் போதைப் பொருள்களை கடத்த முயற்சித்ததை மத்திய போதை பொருள் தடுத்து நிறுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 2023-ல் ஜம்பாடா மற்றும் 2025-ல் கெட்டமெலான் மூலம் பெரிய கும்பல்களை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.