இந்தியா

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: பிணவறைக்குள் புகுந்து உடலைக் கடித்து குதறிய நாய்!

தெலுங்கானாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் உடலை தெருநாய் ஓன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: பிணவறைக்குள் புகுந்து உடலைக் கடித்து குதறிய நாய்!
Telangana
தெலுங்கானா மாநிலம், மெகபூபா பாத் மாவட்டம், நாகசாலா பகுதியைச் சேர்ந்த பீமேஸ்வர் (32) என்ற லாரி ஓட்டுநர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். அவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றில் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசாரால் மீட்கப்பட்ட அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக ஜட்சர்லா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

நிர்வாகத்தின் அலட்சியமும் நேர்ந்த கொடூரமும்

மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பீமேஸ்வரின் உடலை வைப்பதற்கு ஊழியர்கள் முறையான ஸ்ட்ரெச்சர் (Stretcher) கூட வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு வசதிகள் இல்லாத பிணவறையின் தரையிலேயே அவரது உடல் கிடத்தப்பட்டது. அப்போது பிணவறைக்குள் புகுந்த தெருநாய் ஒன்று, தரையில் இருந்த பீமேஸ்வரின் உடலைக் கடித்துத் தின்னத் தொடங்கியது. இந்தத் துயரமான காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீயாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தாமதமான நடவடிக்கை

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின்னர் பீமேஸ்வரின் உடல் இரவு முழுவதும் ஆம்புலன்ஸிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலைப் பாதுகாப்பதில் இவ்வளவு பெரிய அலட்சியம் காட்டிய மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களும் அப்பகுதி மக்களும் ஆக்ரோஷமாக வலியுறுத்தி வருகின்றனர்.