தமிழ்நாடு

'வா வாத்தியார்' படத்தை வெளியிட தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

'வா வாத்தியார்' படத்தை வெளியிட தடை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வா வாத்தியார் படத்துக்கு தடை
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் 'வா வாத்தியார்' திரைப்படம், வரும் 12-ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், கடன் பிரச்னை காரணமாக அப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து நலனின் படம் வெளியாவதால், இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

தடைக்கான காரணம்

ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜா, திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாததால், ஞானவேல் ராஜா தயாரித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றச் சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்திருந்தார். கடன் தொகையைச் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்தாட்சியர் மனுவில் கோரியிருந்தார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடனாகப் பெற்ற ரூ.21.78 கோடி தொகையை ஞானவேல் ராஜா செலுத்தும் வரை, 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அது மட்டுமின்றி, 'வா வாத்தியார்' படத்தை அனைத்து ஓடிடி (OTT) தளங்கள் உள்ளிட்ட எந்தத் தளத்திலும் வெளியிட அனுமதி இல்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.