தமிழ்நாடு

ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம்.. அருவியில் குளிக்க 23 வது நாளாகத் தொடரும் தடை..!

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து அருவியில் குளிக்க தொடர்ந்து 23வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம்.. அருவியில் குளிக்க 23 வது நாளாகத் தொடரும் தடை..!
ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம்.. அருவியில் குளிக்க 23 வது நாளாகத் தொடரும் தடை..!
கேரளத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோவை கனமழை ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை துவங்கியது முதல் தொடர்ச்சி மழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை நெருங்கியது. மேலும் நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து அதிகமாகவே உள்ளது. இதனிடையே கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த மே 24 ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டது. இந்நிலையில் விட்டு விட்டு மழை பெய்தாலும், அருவியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் தொடர்ச்சியாக குற்றாலம் அருவி மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்ததால், கோவை குற்றாலம் அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக 23 வது நாளாக கோவை குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. மேலும் சில நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறுகளில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் அருவிகள் நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.