தமிழ்நாடு

கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மம்…திருச்சி சிவாவுக்கு இபிஎஸ் கண்டனம்

இவரே வெடிகுண்டு வைப்பாராம். இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின் என இபிஎஸ் விமர்சனம்

  கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மம்…திருச்சி சிவாவுக்கு இபிஎஸ் கண்டனம்
எடப்பாடி பழனிசாமி மற்றும் திருச்சி சிவா
சென்னை பெரம்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் திருச்சி சிவா, காமராஜர் குறித்து பேசிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காமராஜருக்கு ஏசி வசதி

திருச்சி சிவா எம்.பி.,பேசும்போது, “தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு என காமராஜர் மாநிலம் முழுக்க கண்டனக்கூட்டங்களை நடத்தி வருகிறார். காமராஜருக்கு ஏசி வசதி இல்லை என்றால் உடலில் அலர்ஜி ஏற்பட்டுவிடும். அதற்காக காமராஜர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி உத்தரவிட்டார்.

திமுக அரசை எதிர்த்து தான் காமராஜர் பேசுகிறார். ஆனால், காமராஜரின் உடல் நலன் கருதி கருணாநிதி ஏசி வசதி ஏற்படுத்த சொன்னார். காமராஜர் உயிர் பிரிவதற்கு முன்னர் கருணாநிதி கைகளை பிடித்துக்கொண்டு நீங்கள் தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் கப்பாற்ற வேண்டும் என சொன்னார்” என குறிப்பிட்டு பேசி இருந்தார்.

இபிஎஸ் கண்டனம்

இது தமிழக அரசியல் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. எளிமையின் சிகரம் என போற்றப்படும் காமராஜர் குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா எப்படி இதுபோல் பேசலாமா என கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி எம்.பி, மாணிக்கம் தாகூர் எம்.பி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், காமராஜர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெரிய பச்சைப்பொய்?

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.


நடிக்காதீங்க மு.க.ஸ்டாலின்

பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே? அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே?

காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே? இவரே வெடிகுண்டு வைப்பாராம்.. இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க மு.க.ஸ்டாலின்.

காமராஜரின் புகழை குறைத்துவிட முடியாது

அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று! ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகாளோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது! வாழ்க கர்மவீரரின் புகழ்!” என பதிவிட்டுள்ளார்.