தமிழ்நாடு

போதை மருந்து விற்பனை.. பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் கைது!

கோவையில் போதை மருந்து விற்பனை செய்த பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  போதை மருந்து விற்பனை..  பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் கைது!
போதை மருந்து விற்பனை.. பணத்தில் கார், நகைகள் வாங்கி குவித்த பைனான்ஸ் அதிபர் கைது!
கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்காக போலீசார் சந்தேகப்படும் இடங்களில் அடிக்கடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் கோவைக்கு வந்து போதை மருந்து மற்றும் கஞ்சா விற்பனைக்கு வந்து செல்வது குறித்து மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அது போன்று வருபவர்களை அவர்கள் தங்கி இருக்கும் இடங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் குனியமுத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கஞ்சா மற்றும் போதை மருந்து வைத்து இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அப்போது அவர் பெயர் சதீஷ்குமார் (வயது 37) திண்டுக்கல் மாவட்டம் துப்பச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. சதீஷ்குமார் அங்கு பைனான்ஸ் செய்து வருகிறார். மேலும் கஞ்சா மற்றும் போதை மருந்து விற்பனையிலும் ஈடுபட்டு வந்து உள்ளார்.

கோவையில் உறவினர்கள் உள்ளனர் என்பதால் அடிக்கடி இங்கு வந்து சென்றுள்ளார். அதன் பிறகு கோவை புதூரில் தனியாக அறை எடுத்து தங்கி, கஞ்சா மற்றும் போதை பொருட்களை தேவைப்படும் நபர்களுக்கு விற்று வந்துள்ளார். இதில் அதிக பணம் கிடைத்துள்ளது. மெத்தபெட்டமைன் எனப்படும் விலை உயர்ந்த போதை பொருள் ஒரு கிராம் ஒரு 2,000 முதல் 3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது என்பதால் அதிலும், ஈடுபட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சதீஷ்குமார் தங்கி இருந்த கோவை புதூர் அறையில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அவர் தங்கி இருந்த அறையில் 525 கிராம் கஞ்சா மெத்தபெட்டமையின் போதைப் பொருள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

போதைப்பொருள் விற்ற பணத்தில் தங்க நகைகளை வாங்கியதாக, போலீசாரிடம் சதீஷ்குமார் கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து தங்க பிரேஸ்லெட், மோதிரங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விலை உயர்ந்த பிச்சை காரையும் போலீசார் கைப்பற்றினர்.

பைனான்ஸ் அதிபர் என்று கூறிக் கொண்டு போதை பொருளையும் விற்று வந்த சதீஷ்குமார் தங்க நகைகளை அணிந்து கொண்டு விலை உயர்ந்த காரில் சதீஷ்குமார் சுற்றி உள்ளார். கடைசியில் கோவை போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில அடைத்தனர்.