தமிழ்நாடு

காதலால் வந்த வினை.. சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய கும்பல்

அரும்பாக்கம் பகுதியல் உதவி இயக்குனரை காரில் கடத்தி, மிரட்டிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கைதாகியுள்ள நபர்களிடமிருந்து ரூ.29,000/- ரொக்கம், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காதலால் வந்த வினை.. சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய கும்பல்
gang kidnaps assistant director of suseenthiran
வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு என பல்வேறு ஹிட் படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் சென்னை, அரும்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவரும் ராஜ்குமரன் என்பவர் கடந்த 29.05.2025 அன்று மதியம் முதல் காணவில்லை என்று, கடந்த 29.05.2025 அன்று இரவு, K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

K-8 அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி ராஜகுமரனை தேடி வந்த நிலையில், ராஜகுமரன் கடந்த 30.05.2025 அன்று காவல் நிலையம் ஆஜராகி, தன்னை 5 நபர்கள் சேர்ந்து காரில் கடத்தி, கையால் தாக்கி, மிரட்டிவிட்டு, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு, மீண்டும் தன்னை காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றதாக தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, உடனடி நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவிட்டதின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) வழிகாட்டுதலின் பேரில், துணை ஆணையாளர் (மேற்கு மண்டலம்) அறிவுரையின்படி, அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களின் நேரடி மேற்பார்வையில், அரும்பாக்கம் உதவி ஆணையாளர் மற்றும் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தனிப்படை போலீசார் மேற்படி ராஜகுமரனை காரில் கடத்த சென்ற நபர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

சந்திரசேகர், கார்த்திகேயன், லலித் ஆதித்யா, திவாகர், அகஸ்டின் என 5 பேர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டு அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து உதவி இயக்குனரின் செல்போன், இருசக்கர வாகனம் உட்பட 7 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.29,000/- ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் கடந்த 29.05.2025 அன்று மதியம் ராஜகுமரன், அரும்பாக்கம்,ரசாக் கார்டன் பகுதியில் டீ குடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த போது, ஒரு கார் ராஜகுமரனின் இருசக்கர வாகனத்தை இடித்து சேதப்படுத்தி, பின்னர் ராஜகுமரனை காரில் கடத்திச் சென்று, காரில் வைத்து, கைகளால் தாக்கியுள்ளனர். மேலும் ராஜகுமரனிடம் அவர் காதலித்து வரும் பெண்ணை மறந்துவிடுமாறு கூறி மிரட்டியுள்ளனர். பின்னர் ராஜகுமரனிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு, அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு, தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது.

காதல் பின்னணி கதை:

ராஜகுமரன் மதுரையில் பாத்திமா கல்லூரியில் படித்த போது ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். படிப்பு முடிந்ததும் அந்த இளம்பெண் பெசன்ட் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2024 அக்டோபர் மாதம் வேலைக்கு சேர்ந்துள்ளார். சில மாதங்களிலேயே அந்த நிறுவனத்தின் உரிமையாளர், டேனியல் ராஜ், அந்த பெண்ணை காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக தெரிகிறது.

ஆனால் அந்த பெண் அரும்பாக்கத்தில் வசிக்கும் சினிமா உதவி இயக்குனர் ராஜகுமரனை காதலிப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் டேனியல் ராஜ் அந்தப் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், அந்த இளம் பெண் கடந்த மார்ச் மாதம் வேலையை விட்டு நின்று விட்டார்.

ராஜகுமரனை ஒழித்தால் தான் தனது ஆசை நிறைவேறும் என நினைத்த டேனியல் ராஜ் இந்த கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக இருந்துள்ளார். மேற்படி கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகளும், விசாரணைக்குப் பின்னர், இன்று (31.05.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.