தமிழ்நாடு

திருமணம் ஆனதாக கூறி ஒரே வீட்டில் வாழ்ந்த ஆண்- பெண் தற்கொலை..!

ஓசூர் அருகே திருமணம் ஆனதாக கூறி ஒரே வீட்டில் வாழ்ந்த ஆண், பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆனதாக கூறி ஒரே வீட்டில் வாழ்ந்த ஆண்- பெண் தற்கொலை..!
Unmarried men and women suicide
ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த புல்லான் விடுதியை சேர்ந்த தினேஷ் (23) என்பவரும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த பவானி (22) என்பவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். தினேஷ் ஓசூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகவும், அதேபோல பவானி ஓசூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகவும் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 3) காலை தினேஷுக்கும் பவானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த பவானி தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். கிருஷ்ணகிரி வரை சென்ற பவானியை, தினேஷின் நண்பர் ஒருவர் வழிமறித்து சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் வீட்டுக்குள் நுழைந்தபோது அங்கு தினேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக தினேஷின் உடலை கீழே இறங்கியுள்ளனர். இதையடுத்து தினேஷின் நண்பர், தான் மற்ற நண்பர்களை அழைத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார். மன வேதனையில் இருந்த பவானி வீட்டின் மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த தினேஷின் நண்பர்கள், இரண்டு பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தினேஷ் மற்றும் பவானி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், இதைமறைத்து ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் இந்த தற்கொலை சம்பவங்கள் நடந்ததும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.