தமிழ்நாடு

"பெண்கள் முன்னேறாவிடில் நாடு முன்னேறாது"- முதல்வர் ஸ்டாலின் உரை!

"ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் பெண்கள்தான்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


CM Stalin
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற மகளிர் உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகளைப் பட்டியலிட்டார்.

சமூகத்தின் முதுகெலும்பு பெண்கள்

மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் பணிக்குச் செல்லும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் பெண்கள்தான். மொத்த மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்கள் முன்னேறவில்லை என்றால், இந்த நாடே முன்னேறாது.

ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிகளவில் வெளியில் வரவேண்டும். புதிய துறைகளில் பெண்கள் இணைய வேண்டும். பல்வேறு துறைகளில் பெண்கள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பெண்களுக்கான திட்டங்கள்

தொடர்ந்து பேசிய அவர், "பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் என திமுக அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி உள்ளது. பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி. புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் என பல.

கட்டணமில்லா பேருந்து பயணம் மூலமாக பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டதால் பெண்கள் சிரமமின்றி வேலைக்கு செல்கின்றனர். பெண்கள் தலைமையேற்று நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டம்" என்று தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்

மேலும் அவர், "கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 3 லட்சம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோய் பிரத்யேக சிகிச்சைக்காக ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

வருங்காலங்களில், பெண்கள் பணிக்கு செல்வதற்காக குழந்தைகள், வயதானவர்களை கவனிக்க பாதுகாப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.