தமிழ்நாடு

தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள் முருகன் – அமைச்சர் ரகுபதி

தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள் முருகன் – அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழ்க் கடவுள் முருகன்
புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மூவார் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அறப்பணி கழகத்தின் 50ம் ஆண்டு பொன் விழா நடைபெற்றது.இதில் கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழர்களின் ஆன்மீகத்திற்கு எடுத்துக்காட்டு

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழ் கடவுள் முருகன் என்கின்ற காரணத்தாலே, தமிழ் கடவுள் முருகன் நமக்கு சொந்தமான கடவுள், அந்த உணர்வோடு இந்த நிகழ்வில் நின்று கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் எந்த பெயரை சொன்னாலும் எடுபடாது என்கிற காரணத்தால் முருகன் பெயரைச் சொல்லிக் கொண்டு, இங்கே சிலர் வந்திருக்கிறார்கள்.

அவர்களும் யார் என்பது நாட்டுக்கு நன்றாக தெரியும், முருகன் என்பது தமிழ் கடவுள், அந்த தமிழ் கடவுளை தமிழர்கள் நன்றாக அறிவார்கள் உணர்வார்கள். தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் எனவும் தெரிவித்தார்.

இபிஎஸ் குறித்து விமர்சனம்

முன்னதாக மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த பி.சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து இருவர் அடித்து நொறுக்கிய சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, பூனை கண்ணை மூடிக்கொண்டால் இருண்டுவிடும் என்று சொல்வார்கள்.

அதுபோல, எடப்பாடி பழனிசாமி எதை பார்த்தாலும் பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு இல்லை என்று சொல்வதே பழக்கமாக போய்விட்டது. அவர் காலையில் தூங்கி எழுந்தாலே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூச்சலிடுவது, முழக்கமிடுவது தான் அவருடைய முக்கிய பணியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.