தமிழ்நாடு

காமராஜரை பற்றி பேசுவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது – சசிகாந்த் செந்தில் எம்.பி.

காமராஜரை பற்றி பேசுவதற்கு தான் உட்பட யாருக்கும் அருகதை கிடையாது என திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

 காமராஜரை பற்றி பேசுவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது – சசிகாந்த் செந்தில் எம்.பி.
திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் மற்றும் திமுக எம்.பி திருச்சி சிவா
திருவள்ளூர் மாவட்டம், பொன்னாலூர்பேட்டை பகுதியில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 2024-2025 - ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மாணவர்களுக்கு நாற்காலி மற்றும் மேசைகளை வழங்கி திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இது போன்ற சம்பவம் கவலை அளிக்கிறது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அரசு பள்ளிக்கு உதவி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்று பல அரசு பள்ளிகளுக்கு உதவிகள் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கிறது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது என்பது ஆதங்கத்தை தருகிறது. நாம் எந்த மாதிரியான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று நினைத்தால் கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி இருப்பதாக தெரிவித்தார்.

அருகதை இல்லை

மேலும் காமராஜர் பற்றி திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, காமராஜர் குறித்து பேசுவதற்கு தான் உட்பட யாருக்கும் அருகதை இல்லை என தெரிவித்தார்.