தமிழ்நாடு

காதல் ஆசை காட்டிய துணை நடிகை.. லட்சங்களை இழந்த ஐடி வாலிபர்

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது காதலன் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

காதல் ஆசை காட்டிய துணை நடிகை.. லட்சங்களை இழந்த ஐடி வாலிபர்
துணை நடிகை மீது காதலன் புகார்
சென்னையை அடுத்த கவுரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஸ். இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் துணை நடிகையும், சீரியல் நடிகையுமான அனாமிகா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அனாமிகாவும் ஹரீஷூம் குங்ஃபூ வகுப்பிற்கு சென்ற போது பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், ஹரீஷ் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹரீஷ், "2018 ஆம் ஆண்டு எனக்கு தெரிந்த ஒருவர் மூலம் துணை நடிகை அனாமிகா எனக்கு பழக்கமானார். நடிகர் யோகி பாபுவின் படத்தில் அனாமிகா நடிக்க உள்ளார். தனியார் தொலைக்காட்சியின் சீரியலில் நடித்து வருகிறார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், இது காதலாக மாறியது. இதனைத்தொடர்ந்து, அனாமிகா தனக்கு பல பணப் பிரச்சினைகள் இருப்பதாகவும் அதை சரி செய்தால் தான் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்றார். மேலும், அவர் கூறியதை நம்பி கேட்கும் போதெல்லாம் பணத்தை கொடுத்து உதவினேன்.

நான் அவர் மீது கொண்ட உண்மையான காதல் மற்றும் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் என்ற அடிப்படையில் அவருக்கு அனைத்து செலவுகளையும் செய்தேன். ஏப்ரல் 2021 வரை அவர் கேட்ட பணத்தை எல்லாம் நான் கொடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் அவர் என்னிடம் அதிகமாக பணம் கேட்க தொடங்கியதால் கொடுக்க முடியவில்லை. இதனால் அனாமிகா அடிக்கடி என்னுடன் சண்டையிட்டார். மேலும் என்னை விட்டு ஒதுங்கினார்.

இதனைத்தொடர்ந்து, வேறொரு நபருடன் அவர் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து நான் கேட்டபோது என்னை மிரட்டினார். இதனால் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம் பறித்த துணை நடிகை அனாமிகா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய ரூ. 4,50,000 பணத்தை மீட்டு தரவேண்டும்.

என்னுடைய பணத்தை கேட்டால் பெண்கள் ஆண்களுக்கு பணம் தரக்கூடாது, ஆண்கள் தான் பெண்களுக்கு பணம் தர வேண்டும் என்று அனாமிகா கூறுகிறார். இதனால் நான் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆத்திரமடைந்த அனாமிகா மாங்காடு காவல் நிலையத்தில் என் மீது புகார் அளித்தார். காவல் நிலையத்திற்கு சென்று அவருடன் எந்த பிரச்சனை செய்ய மாட்டேன் என எழுதி கொடுத்தேன். ஆனால் பண மோசடி புகார் நிலுவையில் இருக்கிறது.

அனாமிகா பணம் வாங்கவில்லை என முதலில் கூறினார். ஆனால் பிறகு பணம் கொடுத்து விட்டதாக பொய் கூறுகிறார். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போவது இரு வீட்டாருக்கும் தெரியும். ஆனால் அனாமிகா என்னை ஏமாற்றி விட்டார். என்னை போல பலர் ஏமாந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது" என்று அவர் கூறினார்.