தமிழ்நாடு

தவெக மாநாட்டில் அதிமுக குறித்து பேசிய விஜய் - பதிலடி கொடுத்த இபிஎஸ்

திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமேயென விஜய்க்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

தவெக மாநாட்டில்  அதிமுக குறித்து பேசிய விஜய் - பதிலடி கொடுத்த இபிஎஸ்
தவெக தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்கள் நமது கட்சி தலைவர்களைப் புகைப்படத்தைப் போட்டுத் தான் கட்சி தொடங்க முடியும் எனத் தவெக மாநாட்டில் எம்ஜிஆர் புகைப்படம் இடம் பெற்றது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

எண்ணற்றத் திட்டங்கள்

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத்தொகுதிகளில் மக்களைச் சந்தித்தார். முதலில் காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். “பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் புனிதமான பூமி. அதிமுக என்பதே அண்ணாவின் பெயரையும், கொடியில் அண்ணாவின் உருவத்தையும் கொண்டது. இந்தப் புனித பூமியில் பேசுவதே என் பாக்கியம். காஞ்சிபுரமே குலுங்கும் அளவுக்குக் கடல்போல் காட்சியளிக்கிறது. அடுத்தாண்டு அதிமுகவின் வெற்றிக்கு இங்கிருக்கும் மக்களின் ஆரவாரமே சாட்சி.

அதிமுக மக்களுக்குச் சேவை செய்யத் தொடங்கப்பட்ட இயக்கம். தீயசக்தி திமுகவை வீழ்த்த இந்தக் கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் எண்ணத்தை நிகழ்த்திக்காட்டியவர் எம்ஜிஆர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மறைந்தாலும் மக்கள் மனதில் பூமி உள்ளவரை நிலைத்து நிற்பார்கள். எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றியவர்கள்.

31 ஆண்டுகாலம் உழைத்த அதிமுக

யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களைச் சொல்லித்தான் துவங்க முடியும். சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள், பாவம் அறியாமையில் பேசுகிறார்கள். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்? இங்கிருக்கும் அவ்வளவு பேரும் அதிமுக தொண்டர்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசிவருகிறார்கள். அதிமுக அப்படியல்ல, ஏழை ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திட்டங்களைத் தீட்டி அதன்மூலம் ஏற்றம் பெற்ற கட்சி. மரம் உடனே வளராது, செடி வைத்துத் தண்ணீர் ஊற்றிப் பின்னர் தான் பூப்பூத்து காய்காய்க்கும். அப்படித்தான் ஒரு இயக்கமும், எடுத்தவுடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது.

எம்ஜிஆர் அவர்கள் கட்சி தொடங்கி 5 ஆண்டுகாலம் தன்னுடைய உழைப்பைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார். ஜெயலலிதாவும் அப்படித்தான் எடுத்தவுடன் முதல்வர் ஆகவில்லை. மக்களுக்கு உழைத்துதான் முதல்வரானார். பேரறிஞர் அண்ணா எடுத்தவுடனே முதல்வர் ஆகவில்லை. நிறைய போராட்டங்களைச் சந்தித்தார். மொழிக்காகச் சிறை சென்றார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு தன்னையே அர்ப்பணித்தார். நம் தலைவர்கள் எல்லாம் அர்ப்பணித்து வாழ்ந்து அதிமுகவை அடையாளம் காட்டிச்சென்றனர். அதனால்தான் அதிமுக நிறைய திட்டங்களைக் கொடுத்தது. தமிழகம் இந்தளவு உயர்ந்ததிருப்பதற்கு 31 ஆண்டுகள் மக்களுக்காக நாட்டுக்காக அதிமுக உழைத்ததுதான் காரணம்.

வேறு எந்தக் கட்சியிலும் வர முடியாது

அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொடுத்திருக்கிறோம். கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார் ஜெயலலிதா, அதிக நிதி ஒதுக்கினார். அதிமுக ஆட்சியில்தான் நிறைய கல்லூரிகளைக் கொண்டுவந்து கல்வியை உயர்த்தினோம். 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்தோம். 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல், வேளாண், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என நிறைய கல்லூரிகளைத் திறந்த ஒரே அரசு அதிமுக அரசு.

ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க அடித்தளமிட்டது அதிமுக அரசு. அது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்தவுடனே இமாலய சாதனை படைத்தது போலப் பேசுறாங்க, நாங்க அப்படியல்ல. இங்கிருப்பவர்கள் உழைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்கள், உழைப்புதான் நிலைக்கும். தொழிலிலும், அரசியலிலும் உழைத்தால்தான் ஏற்றம் பெற முடியும். அதுவும் அதிமுகவில் மட்டும்தான், வேறு எந்தக் கட்சியிலும் வர முடியாது.

தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்

மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்துதான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசிவருகிறார்கள். யாரென்று புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நான் உங்கள் முன் பேசுகிறேன் என்றால் எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டுக் காலம். 1976ல் கிளைக்கழகச் செயலாளராகப் பொறுப்பேற்றேன். அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து உங்கள் முன் நிற்கிறேன், இது உழைப்பால் நிற்கிறேன். சிலர் உழைப்பே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள், அது நிலைக்காது. ஏனெனில், உழைப்புதான் நிரந்தரம்.

திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே. தமிழகத்தில் அதிக உறுப்பினர் கொண்ட இயக்கம் அதிமுக. தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக அரசு. பொன்விழா கண்ட கட்சி. ஆக அதிமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.அதிமுக மக்கள் கஷ்டங்களை அறிந்த இயக்கம். அதிமுகவுக்கு ஜாதி, மதம் கிடையாது. ஆட்சிகாலத்தில் வந்த வறட்சி, புயல், கொரோனாவையே வென்றது அதிமுக அரசு. விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றியது அதிமுக அரசு. பிரதமர் மோடியே தமிழகத்தை பின்பற்றுங்கள் என்று மற்ற முதல்வர்களுக்குச் சொல்லும் அளவுக்குத் திறம்பட ஆட்சி செய்தோம். அதிமுக கட்சியில் மிட்டா மிராசுதாரர், தொழிலதிபர்கள் கிடையாது. உழைப்பாளிகள் நிறைந்த கட்சி. அடுத்தாண்டு தேர்தலில் மக்கள் பேராதரவு பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்.

நடித்தவுடனே ஹூரோ ஆக முடியாது

ஒரு திரைப்படத்தில் நடித்தவுடனே ஹூரோ ஆக முடியாது, பல படத்தில் நடித்த பிறகே ஸ்டார் ஆக முடியும். சினிமாவிலே அப்படி என்றால் அரசியலில் எப்படியிருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். அதிமுகவில் நான் இருந்ததால்தான் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இது சிலருக்குப் பொறுக்கவில்லை. எடுத்தவுடனே எல்லாம் கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். சேவை செய்தால்தான் நிரந்தரமாக இருக்கும், நிலைக்கும்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது, இதை நாம் சொல்லவில்லை, திமுக கவுன்சிலர்களே சொல்கிறார்கள். திமுக கவுன்சிலர்களே மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார்கள். இப்படி ஊழல் நிறைந்த ஆட்சி தொடர வேண்டுமா? காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.அதனால் திட்டங்கள் முடங்குகின்றன.

திமுக முடக்கிய திட்டங்கள் தொடரும்

ஏழை விவசாயிகள், தொழிலாளிகள், தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்களுக்குக் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். திமுக பொங்கலுக்கு வேட்டி, சேலை கொடுக்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் வேட்டி, சேலை திட்டம் தொடரும். தீபாவளிதோறும் பெண்களுக்குச் சேலை வழங்கப்படும். திருமணத்துக்குப் பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத் திருமண உதவித்திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் வழங்கினோம். இத்திட்டமும் தொடரும். மணப்பெண்ணுக்கு பட்டுப்புடவை, மணமகனுக்கு பட்டு வேட்டி கொடுக்கப்படும்.அதேபோல் திமுக முடக்கிய திட்டம் மீண்டும் தொடரும்.

காஞ்சிபுரம் காரப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் மேண்மைமிகு மையம் 120 கோடியில் கொடுத்தோம். அதையும் ஸ்டிக்கர் ஒட்டித் திமுக ஆட்சியில் திறந்தனர். உண்மையில் இத்தனையும் அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள். திமுக எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. பல்வேறு கோரிக்கைகள் கொடுத்திருக்கிறீர்கள். அவை எல்லாமே நிறைவேற்றித் தரப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பைபை ஸ்டாலின்” என்று ஆரவாரத்துடன் பேசி முடித்தார்.