தமிழ்நாடு

குன்றக்குடி KVK சார்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம்- திரளான விவசாயிகள் பங்கேற்பு

"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.

குன்றக்குடி KVK சார்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம்- திரளான விவசாயிகள் பங்கேற்பு
Viksit Krishi Sankalp Abhiyan Campaign by kundrakudi KVK
இந்திய விவசாயத் துறையை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு "விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்" (Viksit Krishi Sankalp Abhiyan) என்ற ஒரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. தமிழில் 'வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற பெயரில் இத்திட்டம் அழைக்கப்படுகிறது.

"வளர்ந்த பாரதம்" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில், 'ஆய்வகத்திலிருந்து வயலுக்கு' என்ற கருத்தை செயல்படுத்துவதை இத்திட்டம் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த மே 29 ஆம் தேதி ஒடிசாவின் பூரியில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 'வளமான விவசாயி, நாட்டின் பெருமை’ என்கிற வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் வருகிற ஜூன் 12, 2025 வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளது.

ஓ.சிறுவயல் கிராமத்தில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம்:

"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் நடைபெறும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.

குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் டாக்டர்.செந்தூர் குமரன் தலைமை வகித்து பேசுகையில், பருவநிலை மாற்றத்தில் விவசாயிகள் முன்னெடுக்க வேண்டிய ஆயத்த உத்திகள் பற்றி எடுத்துரைத்தார். மேலும் விவசாயிகள் வளம்பெற உதவும் அரசின் திட்டங்கள் குறித்தும், அதன் பயன்களும், எவ்வாறு இணைய வேண்டும்? என்பது குறித்த விளக்கத்தையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானிகள் டாக்டர் ஆறுமுக நாதன் மற்றும் டாக்டர் கோபு ஆகியோர் கரும்பு மகசூலை அதிகரிக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தனர். நேற்றைய தினம் பல்வேறு கிராமங்களில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விஞ்ஞானிகள் டாக்டர் செல்வராஜ்,டாக்டர்.ராமகிருஷ்ணன், டாக்டர் விமலேந்திரன், டாக்டர் அழகப்பன் ஆகியோர் கால்நடைகளுக்கான நோய் பராமரிப்பு முறைகள், உர மேம்பாடு, பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், இயற்கை பூச்சிவிரட்டிகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்தினை தெளிப்பது குறித்த செயல்முறை விளக்கம் நேரடியாக விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

"வளமான விவசாயி நாட்டின் பெருமை” என்கிற வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வில், நவீன விவசாய முறைகள், மேம்பட்ட விதை வகைகள், ட்ரோன் தொழில்நுட்பம், டிஜிட்டல் விவசாயம், வேளாண் ஸ்டார்ட்அப்கள், பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பயிர் வகைகள், நீர் பாசன முறைகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் குறைந்த செலவிலான பாதுகாப்பு முறைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.