அரசியல்

கரூர் அரசு வேலை அறிவிப்புக்கு பெ. சண்முகம் எதிர்ப்பு... விஜயின் அடுத்தகட்ட முடிவு என்ன?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் அரசு வேலை அறிவிப்புக்கு பெ. சண்முகம் எதிர்ப்பு... விஜயின் அடுத்தகட்ட முடிவு என்ன?
கடந்த ஆண்டு தவெக பிரசாரத்தின் போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்குவதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் நாளை கரூருக்கு செல்கிறார். தொடர்ந்து அவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க ஏற்கனவே திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் கரூருக்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.

தவெக பிரசாரத்தின்போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.