தமிழ்நாடு

தஞ்சையில் பரபரப்பு: விசிக போராட்டத்தில் போலீசை அறை விட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சையில் பரபரப்பு: விசிக போராட்டத்தில் போலீசை அறை விட்ட இளைஞர்!
tanjore vck protest and clash between youth and police
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் மற்றும் உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெறும் அக்கட்சியின் மாநில மாநாட்டை முன்னிட்டு, தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விசிக சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பேனர்களுக்கு மாநகராட்சியின் முறையான அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்:

பேனர்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விசிக நிர்வாகி லெனின் தலைமையில் அக்கட்சியினர் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பேனர்களை மீண்டும் வைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய அவர்கள், மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

"அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டும்" - இளைஞரால் வாக்குவாதம்:

அப்போது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர், "அவசரமாக வேலைக்குச் செல்ல வேண்டும், வழிவிடுங்கள்" எனக் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசிகவினருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அப்துல்ரஹீம், இளைஞரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீஸார் அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாகவும், அதற்கு பதிலாக ஆத்திரமடைந்த இளைஞர் போலீஸாரை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.

போலீஸாரை அறைந்த இளைஞர் - மல்லுக்கட்டி பிடித்த போலீஸ்:

போலீஸாரை இளைஞர் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கிருந்த சக போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். இளைஞரின் கழுத்தைப் பிடித்து மல்லுக்கட்டியபடி அவரை கட்டுப்படுத்திய போலீஸார், பின்னர் காவல் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகம் மற்றும் சாலை மறியல் நடைபெற்ற பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

மாநகராட்சி ஆணையர் பதில் அளித்திருந்தால் பிரச்சனை பெரிதாகியிருக்காது?:

இதனிடையே, தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி முன்னிலையில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பேனர் அகற்றப்பட்டது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தால், போராட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனை இவ்வளவு பெரிதாகியிருக்காது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

பேனர் அகற்றப்பட்ட விவகாரம், சாலை மறியல், போலீஸ்-இளைஞர் இடையேயான மோதல் என அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.