சினிமா

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தயாரிப்பாளர்!

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு இராவண கோட்டத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தயாரிப்பாளர்!
Raavana Kottam producer Kannan Ravi provided financial assistance to the family of late director vikram sukumaran
விக்ரம் சுகுமாரன் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநாராக பணிபுரிந்தவர். இவர் 2013 ஆம் ஆண்டு கதிர் மற்றும் ஓவியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மதயானைக்கூட்டம் திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து சாந்தனு பாக்யராஜை ஹீரோவாக வைத்து 'இராவண கோட்டம்’ படத்தையும் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தனது தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உதவிக்கரம் நீட்டிய தயாரிப்பாளர்:

விக்ரம் சுகுமாரனின் இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு என கருதப்படும் நேரத்தில் மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக அவரது கடைசிப் படமான ’இராவண கோட்டம்’ படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

நடிகர் சாந்தனு பாக்யராஜ், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் முன்னிலையில் விக்ரம் சுகுமாரனின் தாயாரிடம், தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவி காசோலையை வழங்கினார்.

விக்ரம் சுகுமாரனின் இழப்பு குறித்து கண்ணன் ரவி கூறுகையில், “இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் திடீர் இழப்பு எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் திறமையும் ஆர்வமும் ஒருங்கே கொண்ட இயக்குநர். அவரது திறமையை முழுமையாகக் காணும் முன்பே திரைப்படத்துறை அவரை இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த பிரார்த்தனைகள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 'இராவண கோட்டம்’ படக்குழுவினருக்கு விக்ரம் சுகுமாரன் குடும்பமும் எங்களுடைய குடும்பம் போலதான்” என்றார்.

மறைந்த விக்ரம் சுகுமாரன் இயக்கத்தை தாண்டி, தேசிய விருதுகளை வென்ற ஆடுகளம் திரைப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து வசனம் எழுதி இருக்கிறார். மேலும் விக்ரம் சுகுமாரன் பொல்லாதவன், கொடிவீரன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.