சினிமா

KILLER: ரோல் கேமரா.. ஆக்‌ஷன்.. கட்.. மீண்டும் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா!

”எப்போ சார் திரும்ப டைரக்ட் பண்ணப் போறீங்க?” என தன்னை நோக்கி எழுந்த கேள்விகளுக்கு கில்லர் படத்தின் மூலம் விடைக்கொடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

KILLER: ரோல் கேமரா.. ஆக்‌ஷன்.. கட்.. மீண்டும் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா!
SJ Suryah Returns to Direction with Killer movie
நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, ரசிகர்களைக் "குஷி"ப்படுத்தும் விதமாக, நடிகர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். அவர் இயக்கி, நடிக்கும் தனது கனவுப் படமான "கில்லர்" படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 27) பூஜையுடன் இனிதே துவங்கியது.

நடிகராக கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநராக எப்போது படம் தருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், "கில்லர்" படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அஜித்தின் "வாலி" படம் மூலம் திரையுலகில் இயக்குநராகக் கால் பதித்த எஸ்.ஜே.சூர்யா, முதல் படத்திலேயே தென்னிந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தார். இரண்டாவதாக விஜய் நடித்த "குஷி" படத்தின் வெற்றி, மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. "பான் இந்தியா" என்ற சொல் அறிமுகமாகும் முன்னரே, இந்தியா முழுவதும் பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, "நியூ" படத்தில் நடிகராகவும் களமிறங்கி திரையுலகை வியப்பில் ஆழ்த்தினார் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து இறைவி, நெஞ்சம் மறப்பதில்லை என தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்தார். தற்போது இந்தியத் திரையுலகமே கொண்டாடும் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருகிறார்.

கில்லர் கனவுப்படம்: எஸ்.ஜே.சூர்யா

'நடிப்பு அரக்கன்' என்று பல மொழி ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யாவைக் கொண்டாடி வரும் போதும், அவர் எப்போது படம் இயக்குவார் என்ற கேள்வி அவரது தீவிர ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது அவர் "கில்லர்" என்ற அதிரடி ஆக்‌ஷன் படத்தை இயக்கி நடிக்க இருப்பது அவரது ரசிகர்களைப் பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

"நியூ" படத்தை இயக்கிய அதே எனர்ஜியுடன் திரும்பி வந்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இது எண்டர்டெயின்மென்ட், கமர்ஷியல், காதல், டிராமா, விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் என ஒரு கனவுப் படைப்பாக உருவாகிறது. இந்தியாவில் பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை பிரீத்தி அஸ்ரானி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், "என்னுடைய கனவு இடமான 'இந்தியாவுக்கே எம்.ஜி.ஆர்' (கலைத்துறையில் மட்டும்) என்ற இடத்தை அடைவதற்கு, முதல் பட இயக்குநர் போல, முதல் பட நடிகன் போல மிக சிரத்தையோடு, உங்கள் துணையோடு களமிறங்கி இருக்கிறேன்.

'கில்லர்' எனது கனவுப் படம். சில வருடங்களாகவே எழுதி வந்தேன். இது மக்களை 'குஷி' படுத்தப்போகும் படம். இப்படத்தை தென்னிந்தியாவின் மிகப்பெரிய பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸின் கோகுலம் கோபாலன் அவர்களோடு இணைந்து, ஏஞ்சல் ஸ்டூடியோஸ் பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படமாகப் பிரம்மாண்டமாக உருவாக்குவதில் பெருமை கொள்கிறேன்."

ஐந்து மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும், மேலும் சில முக்கியமான காட்சிகள் மெக்சிகோ நாட்டிலும் படமாக்கப்படவுள்ளன. இப்படத்தின் நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.