இந்தியா

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்
இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து இன்று காலை கொல்கத்தா வழியாக மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

விமானத்தில் கோளாறு

விமானத்தின் இடது எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியா விமானம் AI180 சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டது. இருப்பினும், நள்ளிரவு 12:45 மணிக்கு கொல்கத்தா விமான நிலையத்தை வந்தடைந்தபோது, இடது எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக, காலை 5:20 மணிக்கு, அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து இறங்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. விமானப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுவதாக கேப்டன் பயணிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

பயணிகள் அவதி

ஏர் இந்தியா விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதையும், தரை ஊழியர்கள் அந்தப் பகுதியை ஆய்வு செய்வது குறித்தான வீடியோ வெளியாகி உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் AI-171, புறப்பட்ட சில நொடிகளில் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதிய ஐந்து நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 230 பயணிகள், 10 கேபின் பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் உட்பட 242 பேர் இருந்தனர். பிரிட்டிஷ் நாட்டவரான விஸ்வாஸ் குமார் ரமேஷ் தவிர அனைவரும் உடல் கருகி இறந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து விமானத்தில் ஏதாவது கோளாறு உள்ளதா என்று முழு சோதனை செய்த பின்னரே விமானங்கள் புறப்படுகின்றன. இதனால் சிறிய கோளாறு ஏற்பட்டாலும் விமான புறப்படுவது தாமதமாகிறது. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இருப்பினும் பயணிகளின் நலன் கருதியே இது சோதனைக்கு பின்னர் விமானங்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.