இந்தியா

பீகார் வாக்காளர் பட்டியல் நீக்கம்: ராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டுக்கு' எதிரான நடைபயணம் இன்று தொடக்கம்!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.

பீகார் வாக்காளர் பட்டியல் நீக்கம்: ராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டுக்கு' எதிரான நடைபயணம் இன்று தொடக்கம்!
ராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டுக்கு' எதிரான நடைபயணம் இன்று தொடக்கம்!
நடப்பாண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே சிறப்புத் திருத்தத்தின் மூலம் இத்தனை லட்சம் பேர் நீக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இது மத்திய பாஜக அரசுடன் கைகோர்த்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றியுள்ள காங்கிரஸ் கட்சி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மிக நீண்ட நடைபயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே 'இந்திய ஒற்றுமை பயணம்' மற்றும் 'இந்திய ஒற்றுமை நீதி பயணம்' எனப் பல மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டு, கட்சியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தியின் இந்தப் புதிய நடைபயணமும் அதிக கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாகத் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "வாக்காளர்களின் உரிமைகளை மீட்க நாங்கள் வருகிறோம். ஜனநாயக நாட்டின் மிக அடிப்படையான உரிமை என்பது ஒரு நபருக்கு ஒரு ஓட்டு என்பது. இதை மீட்டெடுக்க நடைபயணத்தைத் தொடங்குகிறோம். பீகார் மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க எங்களுடன் கைகோருங்கள்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த 16 நாள் பயணத்தில், ராகுல் காந்தி 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 1,300 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்யவுள்ளார். இன்று சாசரம், டெஹ்ரி ஆன் சோனே, ரோடாஸ் ஆகிய இடங்களில் தொடங்கி, செப்டம்பர் 1-ஆம் தேதி பாட்னாவில் இந்த நடைபயணம் நிறைவடையும்.