விளையாட்டு

3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் ஓபன் தொடர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னையில் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் ஓபன் தொடர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் ஓபன் தொடர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
கடந்த மூன்றாண்டுகளுக்கு பிறகு, மீண்டும் 'சென்னை ஓபன்' டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதன் பிறகு சென்னையில் டென்னிஸ் தொடரை நடத்துவதற்கான உரிமம் கிடைப்பதில் தொடர்ந்து பிரச்னைகள் எழுந்து வந்தது. இந்நிலையில், உலக டென்னிஸ் சங்கம் தற்போது டென்னிஸ் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், வரும் அக்டோபர் மாதம் பெண்கள் டபிள்யூடிஏ (WTA) தரவரிசையில் இடம்பெறும் இந்த முக்கியமான போட்டி, சென்னையில் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ‘சென்னை ஓபன்’ போட்டி இரண்டு பிரிவுகளில் நடைபெற உள்ளது. ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதனுடன், மகளிர் இரட்டையர் பிரிவில் 16 அணிகள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தவிருக்கின்றனர். போட்டிகள் அனைத்தும் சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள SDAT டென்னிஸ் அரங்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி உலகம் முழுவதிலும் இருந்து பிரபல WTA வீராங்கனைகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீராங்கனைகளுக்கும் இது ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது, ஏனெனில் தங்களது திறமையை உள்ளூர் போட்டியில், சர்வதேச அளவில் நிரூபிக்கக்கூடிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

சிறப்பான ஏற்பாடுகள், பார்வையாளர்களுக்கான வசதிகள் மற்றும் அதிகரிக்கக்கூடிய உலகளாவிய கவனம் ஆகியவற்றுடன், சென்னை 2025 ஓபன் தொடர், தமிழகத்தின் விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 32 ஒற்றையர் பிரிவு ஆட்டங்களும், 16 இரட்டையர் பிரிவு போட்டிகளும் நடைபெறும் என பட்டியலிடப்பட்டுள்ளது. 250 சர்வதேச புள்ளிகள் கொண்ட இந்த தொடரானது 2 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

கடைசியாக 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் WTA 250 ஆட்டத்தில் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி மற்றும் லூயிசா ஸ்டெபானி இரட்டையர் பட்டத்தை வென்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறியதாவது. எங்களது தீவிர முயற்சியின் பலனாக மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னைக்கு திரும்பி இருக்கிறது. இதற்கு பக்கபலமாக இருந்த தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.