விளையாட்டு

T20 World Cup: பிரபல கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி.. இந்திய ரசிகர்கள் கவலை!

டி20 உலக கோப்பை விறுவிறுபாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அதிரடி பேட்ஸ்மென் அபிஷேக் ஷர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

T20 World Cup: பிரபல கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதி.. இந்திய ரசிகர்கள் கவலை!
Abhishek Sharma
இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ள 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, நாளை (பிப்.12) டெல்லியில் நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தச் சூழலில், அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் உடல்நலக்குறைவு: நடந்தது என்ன?

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது இல்லத்தில் வீரர்களுக்கு இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தின் போதே அபிஷேக் சர்மாவிற்கு உடல்நலக் குறைவு (வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல்) அறிகுறி தென்பட்டுள்ளது. இதனால் மற்ற வீரர்கள் கிளம்புவதற்கு முன்பே அவர் பாதியிலேயே வெளியேறினார். நிலைமை சீராகாததால், தற்போது அவர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நமீபியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள்

உடல்நலக் குறைவு காரணமாக நாளை நடைபெறவுள்ள நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கியமான போட்டிக்குள் அவர் முழுமையாகக் குணமடைந்து அணிக்குத் திரும்புவார் என்று அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் வருகை

அபிஷேக் சர்மாவின் உடல்நிலை பின்னடைவைத் தந்தாலும், இந்திய அணிக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்திகள் கிடைத்துள்ளன. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முழுமையாகக் குணமடைந்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விலா எலும்பு காயத்திலிருந்து மீண்ட வாஷிங்டன் சுந்தரும் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளது இந்திய அணிக்குப் புதிய தெம்பைக் கொடுத்துள்ளது.