விளையாட்டு

அன்று கே.எல்.ராகுல்.. இன்று ரிஷப் பண்ட்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய LSG உரிமையாளர்!

லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் ஆக்ரோஷமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அன்று கே.எல்.ராகுல்.. இன்று ரிஷப் பண்ட்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய LSG உரிமையாளர்!
Sanjiv Goenka
ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் ஆக்ரோஷமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆவேசமாக பேசிய உரிமையாளர்

லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 141 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எளிய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்தவுடன் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திற்குள் வந்து, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரிடம் சுமார் 10 நிமிடங்கள் மிகவும் கோபமாகப் பேசிய காட்சிகள் நேரலையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

மீண்டும் வெடித்த சர்ச்சை

உரிமையாளர் ஆவேசமாகச் சைகை காட்டிப் பேசியபோது, கேப்டன் ரிஷப் பண்ட் எவ்விதப் பதிலும் கூறாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்தச் சம்பவம் கடந்த 2024-ஆம் ஆண்டு கே.எல். ராகுலை பொதுவெளியில் சஞ்சீவ் கோயங்கா கடிந்துகொண்ட நிகழ்வை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் உரிமையாளரின் இந்தச் செயலுக்குக் கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், "அணியின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.