தமிழ்நாடு

பரிகாரம் செய்ய வேண்டும்.. என விபூதி நீர் தெளித்து நூதனக் கொள்ளை: கோவை பட்டறையில் 80 சவரன் அபேஸ்!

மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த ஈரானி கொள்ளையர்கள் 3 பேர் சினிமா பாணியில் கைது; தேசிய அளவில் கைவரிசை காட்டிய கும்பலை மடக்கிய கோவை தனிப்படைக்குக் குவியும் பாராட்டு!

பரிகாரம் செய்ய வேண்டும்.. என விபூதி நீர் தெளித்து நூதனக் கொள்ளை: கோவை பட்டறையில் 80 சவரன் அபேஸ்!
பரிகாரம் செய்ய வேண்டும்.. என விபூதி நீர் தெளித்து நூதனக் கொள்ளை: கோவை பட்டறையில் 80 சவரன் அபேஸ்!
கோவை மாநகரில் நூதன முறையில் மாய மந்திரம் செய்வது போல நடித்துத் தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளை அடித்து வந்த ஈரானி கொள்ளையர்கள் கும்பலை, கோவை மாநகரக் காவல்துறை சினிமா பாணியில் துரத்திப் பிடித்து அதிரடி காட்டியுள்ளது.

நடந்தது என்ன?

கோவையில் தங்க நகை பட்டறை நடத்தி வரும் சஞ்சய் என்பவரது பட்டறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், 80 கிராம் தங்கத்தை வேலைப்பாடுக்காக எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, அந்த ஊழியரை அணுகிய கொள்ளையர்கள், உன் குடும்பப் பிரச்சினைக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்ற பெயரில் விபூதி கலந்த நீரைத் தெளித்து, அவரிடமிருந்த தங்கத்தை வாங்கிக் கொண்டுத் தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக சஞ்சய் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மற்றும் சுங்கச்சாவடி கேமராக்கள் மூலம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

சினிமா பாணியில் கைது:

கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் மகாராஷ்டிரா நோக்கிச் சென்றது கண்டறியப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர். நாக்பூரில் ஒரு வாரம் முகாமிட்டுத் தேடுதல் நடத்திய போலீசார், அவர்கள் தங்கி இருந்த வீட்டைச் சினிமா பட பாணியில் சுற்றி வளைத்தனர்.

அப்போது, வீட்டுக்குள் நுழைந்த போலீசாரைக் கண்டதும், அவர்களது குடும்பப் பெண்கள் கூச்சலிட்டுக் காவல்துறையினரைத் தப்பிச் செல்ல விடாமல் கால்களைப் பிடித்துள்ளனர். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முற்பட்டனர். பெண்கள் பிடியில் இருந்து தப்பிய தனிப்படை போலீசார், கொள்ளையர்களைத் துரத்திச் சென்று, யாஷிம் அலி, குர்பானி, மற்றும் பாரித் ஆகிய மூன்று பேரையும் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். எனினும், தலைமறைவாக உள்ள சலீம் அலியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேசிய அளவில் கொள்ளைக் கும்பல்:

விசாரணையில், கைதானவர்கள் ஈரானி சமூகத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்பதும், இவர்கள் 18 வயதுக்குக் குறைவானோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரையே குறி வைத்துப் பரிகார மந்திரங்கள் செய்வதாக மாயாஜாலம் செய்து கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டி வந்துள்ளனர்.

பல ஆண்டுகளாகக் காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளாமல், தேசிய அளவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஈரானி கொள்ளையர்களைத் துணிச்சலாக மடக்கிப் பிடித்துக் கைது செய்த தனிப்படையினரை, கோவை மாநகரக் காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.