தமிழ்நாடு

கோயம்பேட்டில் அரசு பேருந்து திருட்டு.. நெல்லூரில் பிடிபட்ட ஒடிசா இளைஞர்!

கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சென்ற காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேட்டில் அரசு பேருந்து திருட்டு.. நெல்லூரில் பிடிபட்ட ஒடிசா இளைஞர்!
Government bus theft in Koyambed
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒன்று திருடப்பட்ட நிலையில், அந்தப் பேருந்தை திருடிச் சென்ற காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஒடிசா இளைஞர் ஒருவர், ஆந்திர மாநிலம் நெல்லூரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பேருந்து திருட்டு

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தை இயக்குவதற்காக, நேற்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சென்று பார்த்தபோது, பேருந்து அங்கிருந்து மாயமாகியிருந்தது. பேருந்து திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த கிளையின் மேலாளர் ராம்சிங், இது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நெல்லூரில் கைது

இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீசார், கோயம்பேடு போலீசாரைத் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசுப் பேருந்தை பிடித்து வைத்திருப்பதாகவும், அதனைத் திருடிச் சென்ற நபரையும் கைது செய்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோயம்பேடு போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து, நெல்லூர் விரைந்து சென்று அந்த நபரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும், பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் வெளியான தகவல்

விசாரணையில், கைது செய்யப்பட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஞானரஞ்சன் சாஹூ (24) என்பதும், அவர் கூலி வேலை செய்து வருபவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவர் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர் என்பதும் உறுதியானது. தற்போது, கைதான அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.