தமிழ்நாடு

கோவை மக்களின் புதிய பொழுதுபோக்கு தளம்: செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கோவையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவை மக்களின் புதிய பொழுதுபோக்கு தளம்: செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin inaugurated the Semmozhi Park
கோவை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த காந்திபுரம் மத்தியச் சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) திறந்து வைத்தார்.

திட்டத்தின் பின்னணி மற்றும் தொடக்கம்

இந்தப் பூங்கா அமைக்கும் திட்டம், கடந்த 2010 ஆம் ஆண்டு கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. அப்போது 165 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இதனையடுத்து, 2021 ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.5 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்தப் பணிகளுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பூங்கா திறப்பு

கோவையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, அங்கிருந்து கார் மூலம் காந்திபுரம் வந்த முதல்வர் ஸ்டாலின் செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள செம்மொழி வனம், மூலிகைத் தோட்டம், புதிர்த் தோட்டம், ஆரோக்கிய வனம், நீர் வனம், பாறை வனம், பூஞ்சோலை, மலைக்குன்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிட்டார்.